கெட்ட கொழுப்புக்கு 'செக்': உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கும் மாப்பிள்ளை சம்பா உளுந்து கஞ்சி!
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற ஆர்வம் நம்மில் பலருக்கும் உண்டு. அதற்காக ஜிம், கடுமையான உடற்பயிற்சி என இறங்குவோம். ஆனால், நாம் உண்ணும் உணவில் சரியான மாற்றத்தைக் கொண்டு வராமல் உடல் எடையைக் குறைப்பது சவாலான காரியம். குறிப்பாக, நமது பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான மாப்பிள்ளை சம்பா உடல் எடையைக் குறைப்பதிலும், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதிலும் மிகச்சிறந்த பலனைத் தருகிறது.
தினமும் மாரத்தான் ஓட்டம் ஓடத் தேவையில்லை; வாரத்தில் சில நாட்கள் இந்த ஆரோக்கியமான மாப்பிள்ளை சம்பா உளுந்து கஞ்சியைச் சேர்த்துக் கொண்டாலே போதும். இதன் செய்முறை மற்றும் நன்மைகளை விரிவாகப் பார்ப்போம்.

ஏன் மாப்பிள்ளை சம்பா? - ஆரோக்கிய ரகசியம்:
மாப்பிள்ளை சம்பா அரிசியில் நார்ச்சத்து (Fiber) அதிகமாக உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, செரிமான மண்டலத்தைச் சீராக்கி தேவையற்ற கொழுப்பு உடலில் சேருவதைத் தடுக்கிறது. இதனுடன் புரதச்சத்து நிறைந்த உளுந்து சேரும்போது, எலும்புகள் வலுப்பெற்று உடலுக்கு அபாரமான ஆற்றல் கிடைக்கிறது. மேலும் இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு வரபிரசாதம். அந்த காலத்தில் இளவட்டக்கல்லை தூக்கினால்தான் திருமணம் என்பதால், குறிப்பிட்ட வயதுடைய ஆண்களுக்கு இந்த அரிசியால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் தருவார்கள் என்கிறார்கள்.
தேவையான பொருட்கள்:
ஆரோக்கியமான இந்தக் கஞ்சியைத் தயாரிக்கத் தேவையான பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்:
- மாப்பிள்ளை சம்பா அரிசி - 1/2 கப்
- உளுத்தம் பருப்பு - 1/2 கப்
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- காய்கறிகள்: கேரட் (1), பீன்ஸ் (10) - பொடியாக நறுக்கியது
- தண்ணீர் - 1 1/4 லிட்டர்
- எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டிய மசாலா:
- இஞ்சி - 1/2 இன்ச்
- பூண்டு - 5 பல்
- வரமிளகாய் - 3
- தேங்காய் - 3 சில்லு
செய்முறை விளக்கம்: (Step By Step Guide):
வறுத்துப் பொடித்தல்: முதலில் வாணலியில் மாப்பிள்ளை சம்பா அரிசியைச் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். பின் உளுத்தம் பருப்பையும் லேசாக நிறம் மாறும் வரை வறுத்து எடுக்கவும். இவை குளிர்ந்தவுடன் மிக்சியில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
காய்கறி வதக்கல்: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, சீரகம் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் கேரட், பீன்ஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து காய்கறிகள் வேகும் வரை வதக்க வேண்டும்.
கஞ்சி காய்ச்சுதல்: காய்கறிகள் வெந்ததும், அரைத்து வைத்துள்ள அரிசி-உளுந்து பொடியைச் சேர்த்து, 1 1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றவும். கட்டிகள் சேராதவாறு நன்கு கிளறி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
மசாலா சேர்த்தல்: கஞ்சி கொதிக்கும் இடைவேளையில் இஞ்சி, பூண்டு, வரமிளகாய் மற்றும் தேங்காயைச் சேர்த்து கொரகொரவென்று அரைத்துக்கொள்ளவும்.
இறுதி வடிவம்: கஞ்சி நன்கு வெந்து பளபளவென வரும்போது, அரைத்த மசாலாவைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் கிளறி இறக்கினால், மணமணக்கும் மாப்பிள்ளை சம்பா உளுந்து கஞ்சி தயார்!
பயன்படுத்தும் முறை:
இந்தக் கஞ்சியை ஒருநாள் விட்டு ஒருநாள் காலை உணவாகவோ அல்லது இரவு உணவாகவோ உட்கொள்ளலாம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பது மட்டுமின்றி, நாள் முழுவதும் உங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.












Click it and Unblock the Notifications