Thoothuvalai Rasam: மழைக்காலம்! சளி பிடிச்சா தூதுவளை போட்டு ரசம் வச்சி சாப்பிடுங்க! கப்புனு நின்னுடும்!
Thoothuvalai Rasam recipe: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள், பெரியவர்களுக்கு சளி பிடிக்கும். தொண்டை கமறும். இருமல் இருக்கும். இவர்கள் எல்லாம் வீட்டு வைத்தியத்தை பின்பற்றினால் சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

நம் மூதாதையர்கள் நமக்காக எத்தனையோ அற்புதமான மூலிகைகளை விட்டுச் சென்றுள்ளனர். அதில் அற்புதமான ஒன்று தூத்துவளை. இது கொடி வகையை சேர்ந்தது, அப்படியே தரையில் படரும்.
ஒவ்வொவருவரது வீட்டிலும் இருக்க வேண்டிய செடி இது. இந்த தூத்துவளையின் இலைகள் ஏறத்தாழ Heartin வடிவத்தில் இருக்கும். இதன் பின்னால் முட்கள் இருக்கும். இது சளித் தொல்லைக்கு மிகவும் நல்லது. தூதுவளையில் துவையல் அரைக்கலாம், சூப் வைக்கலாம். எல்லாவற்றையும் விட ஒரு ரசம் வைக்கலாம். அதையே சூப்பாக குடித்துவிடலாம். எப்படி செய்வது என்பதை பார்த்துவிடலாம்.
தேவையான பொருட்கள்
தூதுவளை கீரை- ஒரு கைபிடி
தக்காளி- 1
பருப்பு வேக வைத்த தண்ணீர் - 250 மில்லி
புளி கரைசல் 25 மில்லி
உப்பு, மஞ்சள் தூள்- தேவையான அளவு
காய்ந்த மிளகாய் -3
மிளகு, சீரகம் தலா 1 டீஸ்பூன்
பூண்டு - தோலுடன் 6 பல்
கடுகு- ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிது
செய்முறை
தூதுவளை கீரையின் இலையில் உள்ள முட்களை உடைத்து எடுத்துக் கொள்ளலாம். பின்னர் அந்த கீரையை அலசி தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.
சாம்பாரும் வைத்து ரசமும் வைப்பது என்றால் சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் போது அதன் தண்ணீரை ரசத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
வெறும் ரசம் என்றால் துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் வேகவைத்து அதை நன்கு கடைந்து கொள்ளுங்கள். மேற்கண்ட இரு முறைகளிலும் தக்காளியை போட்டு வேகவைத்து கொள்ளுங்கள்.
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய் 2, சிறிது பெருங்காயம், பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் கீரையை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுங்கள்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும், பிறகு தூதுவளை விழுதை சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் அதில் கடைந்த பருப்பு அல்லது பருப்பு வேக வைத்த தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் உப்பு, மஞ்சள் தூள், புளி தண்ணீர் சேர்த்து விடவும். மேலும் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிவிடவும். அடுப்பை மிதமாக வைத்து ரசம் நுரைத்தவுடன் அடுப்பை ஆஃப் செய்துவிடவும். கொதிக்கக் கூடாது. இந்த ரசத்தை சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். சூப்பாகவும் குடிக்கலாம்.












Click it and Unblock the Notifications