ஐ பெரியசாமி முறைகேடு வழக்கு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதது ஏன் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
திமுகவின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருப்பவர் ஐ பெரியசாமி. இவர் ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக உள்ளார். முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கடந்த 2008ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

அந்த சமயத்தில் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் கிளம்பியது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
அப்போது அவர், அரசிடம் ஊதியம் பெறுபவர் பொது ஊழியர் என்பதால் ஆளுநரிடம் தான், வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என்பதால் வழக்கு தொடர அவர் தான் அனுமதி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை, 2023 ஜனவரியில் தாக்கல் செய்த பதில் மனுவில், விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் வழக்கு சாட்சி விசாரணை துவங்கிய பின் இடையில் விடுவிக்க கோர முடியாது என்ற நிலைபாட்டை தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குற்றச்சாட்டு பதிவுக்கு பின் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணை நீதிமன்றம் விடுவிக்க முடியாது எனவும் தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையான அனுமதி பெறவில்லை என்றால், ஏன் முறையான அனுமதியை ஆளுநரிடம் பெறவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கேள்வி எழுப்பினார்.
இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை. இனிமேலும் சென்று ஆளுநர் அனுமதி பெறலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, விடுவிப்பை எதிர்த்து ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது என்றார்.
வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உடனேயே, லஞ்ச ஒழிப்புத் துறை, உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி வழக்கு தொடர அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, சிறப்பு நீதிமன்றமும், ஆளுநரிடம் முறையாக அனுமதி பெறும்படி லஞ்ச ஒழிப்புத்துறை உத்தரவிடவில்லை எனத் தெரிவித்தார்.
வழக்கு நீண்ட தூரத்தை கடந்து விடவில்லை. ஒரே ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால், ஆளுநரிடம் அனுமதி பெறலாம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, அமைச்சராக இருப்பவர் மக்கள் மத்தியில் சுத்தமானவராக இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications