ஆறுமுகனின் 16 திருமுகங்கள்
அல்சூர் முருகன் கோயில் மட்டுமே முருகனின் 16 திருஉருவங்களை காண முடியும்.முருகனின் திருஉருவங்கள் கோவிலின் வெளி பிரகாரத்தின் சுற்றுச்சுவற்றில்கோபுரத்தில் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. அந்த சிலைகளின் படங்களும்விளக்கமும்:
- சக்திதர ஸ்வாமி
ஒரு திருமுகமும், இரு திருக்கரங்களும், இடக் கரத்தில் வஜரமும், வலக்கரத்தில் இச்சா ஞான கிரியா சக்தி வடிவமாகிய வேலாயுதமும் ஏந்திக் கொண்டுஅசுரவதம் பொருட்டு நின்ற திருவுருவம்.

- ஸ்கந்த ஸ்வாமி
ஒரு திருமுகமும், இரு புஜங்களும், அரையில் கோவணமும் கொண்டு, வலக்கரத்தில் தண்டை ஊன்றி, இடக்கரத்தைத் துடையில் வைத்து செம்மேனியுடன் விளங்குகின்ற திருஉருவம்.

- தேவசேனாபதி ஸ்வாமி
சூரியப்பிரகாசமும், பன்னிரு திருக்கண்களும், ஆறு திரு முகங்களும், பன்னிரு திருக்கண்களும்,புன்முறுவலும் ; வலக்கரத்தில் சக்தி, வாள், அங்குசம், பாணம், தண்டு, அபயமும்; இடக்கரத்தில் வஜ்ரம், கேடகம், பாசம், சேவல், தாமரை, வரதமும் ஆகிய இவைகளைத் தாங்கி, தேவர்களையும், மூவர்களையும் தனக்குச் சேனைகளாகக் கொண்டு நின்ற திருவுருவம்.

- சுப்ரமணிய சுவாமி
சிவந்த நிறமும், சந்திரதகாந்திரப் பிரகாசமும், ஆர கேயூரம் முதலிய சிறந்த அணிகலங்களும். ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும், அபய வரதமும். வேலும் சேவற்கொடியும் தாங்குதலுங் கொண்டு மிகவும் வரதராய் விளங்குகிற திரு உருவம்.

- கஜவாஹன சுவாமி
ஒரு திருமுகமும், இரு திருக்கண்களும், நான்கு திருக்கரங்களும், வலக்கரங்களில் வேலும் அபயமும். இடக்கரங்களில் சேவற்கொடியும் வரதங் கொண்டு வேண்டியவற்றையெல்லாம் வழங்குவதாய் நின்ற திருவுருவம்.

- சரவணபவ ஸ்வாமி
ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக் கண்களும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, தேவகணங்களால் உபாசனை செய்யப்பட்டு நல்லவர்களால் பூசிக்கப்பட்டு, வலக்கரங்களில் சக்தி, பாசம், வாள், தாமரை, சேவல், அபயமும்; இடக்கரங்களில், பாசம், தண்டம், டங்கம், பாணம், வில், வரதம் இவைகளை ஏந்தி நின்ற திருவுருவம்.

- கார்த்திகேய சுவாமி
ஆறு திருமுகங்களும், ஆறு திருக்கரங்களும், பாலசூரியப் பிரகாசமும், வலக்கரங்களில் சக்தி, வாள், அபயமும்; இடக் கரங்களில் குலிசம், கேடகம், வரதமும் தாங்கி சாதுக்கள் வழிபட விளங்குகின்ற திருவுருவம்.

- குமார சுவாமி
ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும். வலக்கரங்களில் சக்தி, வாள், இடக்கரங்களில் கொடி, கேடகம் உடையவராய் விளங்குகின்ற திருவுருவம்.

- சண்முக சுவாமி
சிந்தூர காந்தி நிறமும், மயில் வாகனமும், ஆறு திருமுகங்களும், தெய்வயானை சமேதமும், பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, வலக்கரங்களில் சக்தி, பாணம், வாள்,கொடி, தண்டு, அபயமும் ; இடக்கரங்களில் வில், வஜ்ரம், தாமரை, கேடகம், சூலம், வரதம் இவைகளைத் தாங்கி அருள் வடிவாய் நின்ற திருவுருவம்.

- தாரகாரி சுவாமி
பன்னிரு திருக்கரங்களிலும் இடத்தில் முறையே வரதம், அங்குசம், சேவற்கொடி, கேடகம், வில், வஜ்ரம்,. வலத்தில் அபயம், பாசம், சக்கரம், கட்கம், உலக்கை, சக்தி இவைகளைத் தாங்கி தாரகனை வதைத்த திருவுருவம்.

- சேநாகி சுவாமி
ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களும், வலத்தில் அபயம், வாள். சக்கரம், அங்குசம், சக்தி, சூலம் ; இடத்தில் வரதம், குலிசம், பாசம், தாமரை, தண்டம், கதை இவைகளை ஏந்திய வடிவங்கொண்டு தேவர்களைச் சைன்யமாகக் கொண்டு நின்ற திருவுருவம்.

- பிரம்மசாஸ்த்திர சுவாமி
ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும், வலக் கரங்களில் அபயமும், உருத்திராட்ச மாலையும் ; இடக்கரங்களில் வரதமும் குண்டிகையும் உடைவராய் நான்முகக் கடவுளுக்கு உபதேசித்த திருவுருவம்.

- வள்ளிகல்யாண சுந்தர சுவாமி
உருத்திராட்ச மாலையும், குண்டிகையும், வரதாபயமும் உடைய திருக்கரங்களுடன், வள்ளியம்மையாருடன். திருமால் நீர்கலசத்து தாரை வார்க்க ஓமம் செய்யப்பட்டவராய் எல்லா அமரர்களும் சேவிக்க விளங்குந் திருவுருவம்.

- பால சுவாமி
குழந்தை உருவமாய் மேல் தூக்கிய இரு கரங்களும் கரங்களில் தாமரைமலர் இரண்டு கொண்டு அம்மையப்பருக்கு இடையில் அமர்ந்திருக்கும் திருவுருவம்.

- கிரெளஞ்சபேதன சுவாமி
ஆறு திருமுகங்களும், எட்ட திருக்கரங்களும் அபயம், கிருபாணம், வேல், அம்பு, வரதம், குலிசம், வில், கேடகம் என்ற ஆயுதங்களை முறையே வலமும்இடமுங் கொண்டு தேவ சேனைகள் சூழ கிரெளஞ்சத்தைப் பிளந்த திரு உருவம்.

- சிகிவாகன சுவாமி
பவள நிறமும், ஒரு திருமுகமும், நான்கு திருத் தோள்களும், வஜ்ரம், வேல், வரதம், அபயம் இவைகளுடனும், மயில் வாகனத்தில் ஊர்ந்த வண்ணமாய்அமரர்களுடைய இடரை நீக்கிய திருவுருவம்.












Click it and Unblock the Notifications