சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்குத் தடை
சென்னை:
சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலங்களுக்கு வழங்கப்பட்டிருந்தஅனுமதிகளை காவல்துறை வாபஸ் பெற்றுவிட்டது.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது குறித்து சென்னை நகர காவல்துறை ஆணையர் முத்துக் கருப்பன் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்த ஊர்வலத்தில் வன்முறையைத் தூண்ட சில சக்திகள் முயன்று வருகின்றன. இந்த ஊர்வலத்தில் பிரச்சனையை ஏற்படுத்த சமூகவிரோத சக்திகள் திட்டமிட்டுள்ளதாக உளவுப் பிரிவின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இதனால், பொதுச் சொத்துக்களுக்கும், தனியாரின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படலாம். மேலும் உயிரிழப்புகள் கூடஏற்படலாம். இதனால், இந்த பேரணிக்குத் தரப்பட்டுள்ள அனுமதியை போலீஸ் ரத்து செய்துள்ளது.
தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் விநாயகர் சிலையை எடுத்துச் செல்ல யாராவது விரும்பினால் அவர்களுக்கு போலீஸ்பாதுகாப்பு வழங்கப்படும்.
மிகப் பெரிய விநாயகர் சிலைகளை வைக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் அமைதியைப் பேணவும், பொது மக்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் தான் இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முத்துக் கருப்பன் கூறினார்.
வருடாவருடம் நடக்கும் இந்த பேரணியில் வன்முறை வெடிப்பதும், போலீஸ் சுடுவதும் வழக்கமாகப் போய்விட்டது. இதே போலமிலாடி நபி ஊர்வலத்திலும் வருடாவருடம் பொதுமக்கள் ரத்தம் சிந்துவது வழக்கமாகிவிட்டது.
இப்போது தான் திமுக பேரணி வன்முறையில் 5 பேர் பலியாகி அந்த ரத்தத்தின் ஈரம் கூட காயாத நிலையில் அடுத்து ஒரு பேரணிரிஸ்க் எடுக்க மாநில அரசு விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்துத் தான் இந்தப் பேரணிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.