காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. விண்ணதிர எழுந்த பக்தர்களின் “சிவாய நம” கோஷம்!
காஞ்சிபுரம்: உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு, வாண வேடிக்கைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று அதிகாலையில் சிறப்பாக நடைபெற்றது. ரூ.29 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் திருப்பணிகள் நடைபெற்றன. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.
பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படுகிறது காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில். இந்தக் கோவில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் 29 கோடி ரூபாய் செலவில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

இன்று அதிகாலை 5.45 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் சன்னதி கோபுரங்களுக்கு புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. "சிவாய நம" என பக்தர்கள் கோஷம் எழுப்பினர். காலை 6.30 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கான தல வரலாறு பிரசித்தி பெற்றது. ஒருமுறை பார்வதி, சிவபெருமானின் கண்ணை விளையாட்டாக மூடியதால் உலகமே இருண்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான ஜீவராசிகள் பாதிப்படைந்தனர். இதனைத் தொடர்ந்து சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்து உலகத்திற்கு வெளிச்சம் தந்தார் என்பது புராணம்.
பார்வதியின் விளையாட்டால், பார்வதி மீது சிவன் கோபம் கொண்டார். இதனைத் தொடர்ந்து பார்வதி பூலோகம் வந்து, சிவபெருமானின் கோபம் குறைய வேண்டி சிவபெருமானை நோக்கி, தவமிருந்தார். மணல் லிங்கம் செய்து, மாமரத்தின் அடியில் பல ஆண்டுகள் பார்வதி தான் தவமிருந்ததை கண்டு சிவபெருமான் வியந்தார். அவரது தவத்தை உலகம் அறியச்செய்யும் வகையில், சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து, செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார்.
சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்றி பார்வதி தேவிக்கு காட்சியளித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மாமரம் தான் ஏகாம்பரநாதர் கோவிலின் தல விருச்சகமாக இருந்து வருகிறது. பார்வதி தேவி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை "தழுவக் குழைந்தார்" என்றும் அழைப்பதுண்டு. இக்கோவில் சிவன் - பார்வதி இடையேயான காதலை வெளிப்படுத்தும் கோவிலாகவும் பார்க்கப்படுகிறது.
குடமுழுக்கு விழாவையொட்டி ஏகாம்பரநாதர் கோவில் ராஜகோபுரம், ரிஷிகோபுரம் உள்பட கோபுரங்கள் அனைத்தும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலில் மூலவர் நுழைவுவாயில் முன்பாக வண்ண வண்ண பூக்களால் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. யாகசாலையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத நேற்று எட்டாம் கால பூஜை விமரிசையாக நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இருந்து வந்த 40-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பக்க இசைக்கருவிகளுடன் திருமுறை பாராயணம் பாடினர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி சண்முகம் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications