Hanuman Jayanthi: இன்று அனுமன் ஜெயந்தி! நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை!
நாமக்கல்: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயர் கோயில்கள் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு 1லட்சத்து 8 வடை மாலைகள் சாத்தப்பட்டது.

மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படும். அதிலும் மார்கழி அமாவாசையில் வரும் இந்த விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவை அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும் கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரம்மாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் தினசரி அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயில் ஆண்டுதோறும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இன்று காலை 5 மணிக்கு 1,00,008 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். 11 மணி வரை வடை மாலையில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அப்போது நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சீயக்காய், 1008 லிட்டர் பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். இதையடுத்து பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பார்.
அனுமன் ஜெயந்தியையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏதுவாக கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழி என தனித்தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மார்கழி மாத அமாவாசை, வெள்ளிக்கிழமை சேர்ந்த நாளில் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி வந்திருப்பதால் இன்று நடத்தப்படும் வழிபாடுகள் அதிக பலன் தரும். ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் தான் இருப்பேன் என கூறி, கிடைப்பதற்கு அரிய வைகுண்ட பதவியை கூட வேண்டாம் என்று சொன்னவர் ஜெய் அனுமன். அனுமன் கோயில்களில் 1008, 10008, 100008 என வடை மாலைகள் சாற்றப்படுவது வழக்கம்.
இந்த நன்னாளில் அனுமன் கோயிலுக்கு சென்று வெண்ணெய், துளசி மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை உள்ளிட்டவைகளை அனுமனுக்கு சாற்றலாம். எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் வந்துவிடுவார். ராமாயணம் வாசிக்கப்படும் இடத்தில் பிரத்யட்சமாக ஹனுமன் வீற்றிருப்பார் என்பது உண்மை. அதனாலேயே இந்த காலகட்டத்திலும் ராமாயண சொற்பொழிவு நடைபெறும் மேடைகளில் அனுமனுக்கு தனியாக ஆசனம் அமைத்து வைத்திருப்பார்கள்.












Click it and Unblock the Notifications