தமிழ் புத்தாண்டு: வடபழனி முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்.. அதிகாலை முதலே சாமி தரிசனம்
சென்னை: தமிழகம் முழுவதும் சித்திரைத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரளாகக் கூடி சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டை சிறப்பாக தொடங்கும் வகையில், திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டனர்.
தமிழ் புத்தாண்டு, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. புதிய தொடக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் வளமான வாழ்க்கைக்கான ஆசைகளுடன் இந்த நாள் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கனி காணுதல் இதில் முக்கிய அம்சமாகும். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், பழ வகைகள், தங்கம், வெள்ளி நகைகள், கண்ணாடி வைத்து காலை கண் திறந்தவுடன் கண்ணாடியில் தன்னையும், அதன் அருகில் வைக்கப்பட்ட வளமான பொருட்களையும் பார்க்கும் போது, ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம், செழிப்பு, சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

குடும்பத்துடன் சேர்ந்து இந்த திருநாளை கொண்டாடுவது, உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு இனிய தருணமாகவும் அமைகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். சென்னை வடபழனி முருகன் கோயில் பகுதியில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.
புத்தாண்டின் முதல் நாளில் சாமி தரிசனம் செய்தால் ஆண்டெங்கும் நலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையால், குடும்பத்துடன் பலரும் கோயிலுக்கு வந்திருந்தனர். கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications