சென்னையிலிருந்து அறுபடை வீடுகளுக்கும் சிறப்பு பேருந்து சேவை! எப்போது தொடங்குகிறது?
சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சென்னையிலிருந்து அறுபடை வீடுகளுக்கு சிறப்பு பேருந்து சேவையை வழங்கும் திட்டம் குறித்து அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பழனி, சுவாமி மலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் முருகன் கோயில்கள் உள்ளன. இவை அறுபடை வீடுகள் என அழைக்கப்படுகின்றன.

கும்பகோணத்தில் இருந்து ஒரே நாளில் நவக்கிரக கோயில்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்துவிட்டு மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு பேருந்துகள் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சேவை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் இருக்கும். இதற்காக பயணி ஒருவருக்கு ரூ 750 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 பேர் வாடகை கார்களில் நவக்கிரக கோயில்களுக்கு சென்றாலே ரூ 6500 ஆகிறது. இதே அந்த 3 பேர் இந்த பேருந்தில் சென்றால் வெறும் ரூ 2250 தான் ஆகும்.
அதன்படி நவக்கிரக கோயில்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு முதலில் திங்களூர் சந்திரன் கோவில் தரிசனம், இரண்டாவதாக காலை 7:15 மணிக்கு திங்களூரிலிருந்து ஆலங்குடி சென்று குருபகவான் தரிசனம், பிறகு காலை உணவு இடைவேளைக்குப் பிறகு ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 9:00 மணிக்கு திருநாகேஸ்வரத்தில் ராகு பகவான் தரிசனம், 10 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் தரிசனம், காலை 11 மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம் காலை 11:30 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் கிரக தரிசனம் செய்யலாம்.
மதியம் 12.30 முதல் 1.30 வரை மதிய உணவு இடைவேளை, பிறகு மதியம் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம் மாலை 4 மணிக்கு கீழ பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், மாலை 4.45 மணிக்கு திருநள்ளாறு சனி பகவான் தரிசனம், மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் இந்த சிறப்பு பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.
அது போல் நவ திருப்பதி என சொல்லப்படும் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருபுளியங்குடி, பெருங்குளம், இரட்டை திருப்பதி, தென்திருப்போரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி, மற்றும் புன்னையடி வனத்திருப்பதி கோயில், கருங்குளம், நாங்குநேரி, திருகுருங்குடி ஆகிய இடங்களுக்கும் ஒரே நாளில் பேருந்தில் சென்று வரும் வகையில் உள்ளது. இதில் கட்டணமாக ஒருவருக்கு ரூ 300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சுற்றுலா சேவையை வழங்கும் நோக்கில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கிட்டதட்ட 4 அல்லது 5 நாட்களுக்கு பயணித்து சென்னை திரும்பும் வகையில் பயண திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதற்கான அனுமதி கிடைத்ததும் சென்னையிலிருந்து திருத்தணிக்கும் அங்கிருந்து சுவாமிமலை , பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருச்செந்தூர் செல்லும். மீண்டும் அதே வழியில் சென்னை திரும்பக் கூடிய வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications