திருத்தணியில் இன்று ஆடி கிருத்திகை! விரதம் இருப்பது எப்படி? விண்ணை பிளக்கும் கந்தனுக்கு அரோகரா கோஷம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை பெருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த கிருத்திகை தினத்தில் விரதம் இருந்தால் முருகன் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். நேற்றைய தினம் ஆடி பரணி கொண்டாடப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தனர்.
பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்டவைகளை எடுத்து பக்தர்கள் முருகனுக்கு வேண்டுதல்களை வைத்தனர். மேலும் நேர்த்திக் கடனையும் செய்தனர்.

முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் கிருத்திகை ஆகும். அதிலும் மாதந்தோறு் கிருத்திகைகள் வந்தாலும் ஆண்டுக்கு 3 முறை வரும் கிருத்திகைகள் மிகவும் முக்கியமானதாகும். உத்திராயன காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபம், தட்சிணாயன காலத்தின் தொடக்கமான ஆடி மாதம் வரும் ஆடி கிருத்திகை ஆகியவை ஆகும்.
இந்த 3 கிருத்திகைகளில் ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிக் கிருத்திகை அன்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.
இந்த நாளில் பலவிதமான காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் முருகப் பெருமானை வழிபட்டு பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள். ஆடிக் கிருத்திகை அன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யப்படும். இதற்காக பக்தர்கள் பால் குடம் ஏந்தி வருவது வழக்கம்.
ஆடிக் கிருத்திகையில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். குழந்தை வரம், திருமணம், பதவி உயர்வு, செவ்வாய் தோஷம் உள்ளிட்டவைகளுக்கு வேண்டிக் கொண்டால் பலன் கிடைக்கும். ஆடிக் கிருத்திகை என்றாலே நினைவுக்கு வருவது திருத்தணி முருகன் கோயில்தான்.
இந்த ஆண்டு ஜூலை 29ஆம் தேதியான இன்றைய தினம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆடி பரணி விழா திருத்தணியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பல ஆயிரம் பக்தர்கள் காவடியுடன் குவிந்தனர். திருத்தணி கோயிலில் ஐந்து நாட்கள் விழா நடைபெறும். பக்தர்கள் காவடி எடுத்து திருத்தணிக்கு படையெடுத்துள்ளனர். நேற்று முருகனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு வைர முத்துக் கல்லும் பொருத்தப்பட்டிருந்தது. இன்று ஆடிக் கிருத்திகை நாளையொட்டி திருத்தணிக்கு பக்தர்கள் சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இன்று மதியம் 2.41 மணிக்கு கார்த்திகை நட்சத்திரம் தொடங்குகிறது. இது அடுத்த நாள் 30 ஆம் தேதி பகல் 1.40 மணி வரை இருக்கும். இதனால்தான் கார்த்திகை தீபம் என்று என்பதில் பக்தர்களுக்கு குழப்பம் நிலவியது. பொதுவாக பக்தர்கள் பரணியிலேயே கார்த்திகை விரதத்தை தொடங்கிவிடுவார்கள்.
அந்த வகையில் நேற்று முதல் விரதம் இருந்த பக்தர்கள் இன்று ஆடிக் கிருத்திகையையொட்டி முருகனின் அறுபடை வீடுகளுக்கு வந்து முருகனை தரிசித்து வருகிறார்கள். பிறகு மாலை தங்கள் விரதத்தை கைவிடுவார்கள். இந்த ஆடி கிருத்திகை விழாவையொட்டி சென்னை வடபழனி, குமரகுன்றம், திருத்தணி, திருச்செந்தூர், பழனி, உள்ளிட்ட கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
விரதம் இருப்பது எப்படி: கிருத்திகை நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து குளித்து விட வேண்டும். பின்னர் வீட்டின் பூஜை அறையிலோ அல்லது முருகனின் கோயிலிலோ முருகனை வழிபட வேண்டும். பிறகு விரதத்தை தொடங்க வேண்டும். இந்த நாளில் காலையிலிருந்து மாலை வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பது நல்லது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் பால் அல்லது பழங்களை சாப்பிடலாம். விரத காலத்தில் கந்த சஷ்டி கவசத்தையும் முருகனின் பக்தி பாடல்களையும் பாடலாம். மாலையில் வீட்டில் பூஜைகளை செய்து சைவ உணவு சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications