மாயூரம் துலாக்கட்ட காவிரியில் கடைமுழுக்கு.. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
மயிலாடுதுறை: ஐப்பசி மாதத்தின் கடைசி நாளான இன்று மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்த விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடைமுக தீர்த்தவாரியில் பங்கேற்று காவிரியில் நீராடி மயூரநாதரை தரிசனம் செய்தனர்.
சிவபெருமான்: மயிலாடுதுறையில், சிவபெருமான் ஐந்து வள்ளல்களாக ஐந்து இடங்களில் கோயில்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார். மயூரநாதர் கோயிலில் பக்தர்களுக்கு அனைத்தையும் அருளும் வள்ளலாகவும், வள்ளலார் கோயிலில் ஞானத்தை வழங்கும் வள்ளலாகவும், காவிரியில் எங்கே ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வழி காட்டியதால், விளநகரில் துறை காட்டும் வள்ளலாகவும், மூவலூரில் வழிகாட்டும் வள்ளலாகவும், பெருஞ்சேரியில் பொருள் தரும் வள்ளலாகவும் சிவபெருமான் கோயில் கொண்டிருப்பதால்தான் 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது' என்ற புகழுடன் திகழ்கிறது மயிலாடுதுறை.

துலா காவிரி: காவிரியில் நீராடினால் அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றை தரும். எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும், பாபங்கள் விலகும் என்று நதி தேவதைகளிடம் பிரம்மா கூறினார். துலாக் கட்ட வைபவத்தின் கடைசி நாளான 'கடைமுழுக்கு வைபவம்' அன்று நீராடி, மயூரநாதரையும் அன்னை அபயாம்பிகையையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் விலகி, மோட்சம் கிட்டும் என்பது நம்பிக்கை.
கடைமுகம்: ஐப்பசி மாதக்கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர். இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்று கூறுவார்கள். ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும் என்பது நம்பிக்கை.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
துலா கட்ட உற்சவம்: அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது சிவாலயங்களில் இருந்து சாமி புறப்பாடாகி, துலா கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 1ஆம் தேதி துலா உற்சவம் தொடங்கியது.
காவிரியில் புனித நீராடல்: மயிலாடுதுறையின் காவிரித்துறையின் பெயர் துலாக்கட்டம் எனப் போற்றப்படுகிறது. மயிலாடுதுறையின் பெருந் திருவிழாவின் பெயர் துலா உற்சவம் என்றே அழைக்கப்படுகிறது. துலா மாதத்தில் வரும் கடைமுழுக்கு தீர்த்தவாரித் திருவிழா, ஸ்ரீமயூரநாதர் அபயாம்பிகையின் வருடாந்திரத் திருவிழாவில் மிக முக்கியமான வைபவமாகப் போற்றப்படுகிறது.

தீர்த்தவாரி உற்சவம்: மாதம் முழுதும் காவிரியில் தீர்த்தமாடும் இறைவன் மாதத்தின் கடைசி நாளான ஐப்பசி 30ஆம் நாள் கடைமுக தீர்த்தவாரி காண்பதாக ஐதீகம். இதுவே மயிலாடுதுறையில், முக்கியமான திருவிழாவாகப் போற்றி கொண்டாடப்படுகிறது.
கடைமுக தீர்த்தவாரி: கடைமுக தீர்த்தவாரி 16ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் வாழைமரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மயிலாடுதுறை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை: பல்வேறு சிவாலயங்களிலும் இதுபோல் உற்சவங்கள் தொடங்கியுள்ள நிலையில் ஐப்பசி கடைசி நாளான இன்று நவம்பர் 16ஆம் தேதி கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்ட நவம்பர் 25ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications