அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் அதிசயம்! அடைத்த கதவு தானாக திறக்கும்! வாடாத மல்லிகை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பூசாரி தேங்காய் உடைத்ததும் கோயிலின் கருவறை தானாக திறக்கும் அதிசய சம்பவம் நிகழ்ந்து வருகிறது. இந்த கோயிலுக்கு ஆயிரங்கண் மாரியம்மன் என்ற பெயராகும்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரின் மேற்கில் பாவடித்தோப்பு எனும் இடத்தில் இந்த கோயில் உள்ளது. இது 100 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மனுக்காக எழுப்பப்பட்ட கோயிலாகும்.
இந்த கோயிலின் பின்புறம் ஒரு தெப்பக்குளம் அமைந்துள்ளது. எனவே இந்த கோயில் தெப்பக்குள ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
பலிபீடம்
கோவிலின் முன்புறம் பலிபீடம், கொடிக்கம்பம், சிம்ம வாகனம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. அடுத்து முக மண்டபம் உள்ளது. இதைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும், கருவறையும் அமைந்துள்ளது. கருவறையில் மாரியம்மன் திரிசூலத்துடன் நின்றவாறு காட்சி தருகிறார்.
திருக்கோயில்
ஆதியில் இத்திருக்கோயில் அமைந்த இடம் இடுகாடாக இருந்தது; எனவே, பல சித்தர்கள் இங்கு ஜீவசமாதி அடைந்துள்ளனர். அக்காரணத்தினால் இத்திருக்கோயில் மிக்க சாந்நித்தியத்துடன் திகழும். அம்பிகை சாந்தசொரூபியாகத் திகழ்வதால் இங்கு உயிர்ப்பலி இடுதல் வழக்கம் இல்லை.
அன்னதானம்
அதற்கு மாறாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்று திருக்குத்துவிளக்கு பூஜையும் மார்கழியில் தனுர் பூஜையும், தைப்பொங்கல், நவராத்திரி போன்ற பல்வேறு விழாக்கள் கோயிலில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
சித்திரை மாதம்
சித்திரை மாதத்தில் நடக்கும் பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியுடன் விழா தொடங்கும். 8ஆம் நாள் திருவிழாவையொட்டி மாலையில் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும்.
100-க்கும் மேற்பட்ட பெண்கள்
இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வார்கள். பொங்கல் வைக்கப்படும் அன்று நள்ளிரவில் ஆயிரங்கண் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்படும். புத்தாடை உடுத்தப்பட்டு அலங்காரங்களும் ஆபரணங்களும் சாத்தப்படும்.
நைவேத்தியம்
அம்மனுக்கு நைவேத்திய படையலிடப்படும். தூப தீபம் காட்டிவிட்டு அர்த்த மண்டபக் கதவை அடைத்துவிடுவார்களாம். இதையடுத்து கோயிலின் பூசாரி வேப்பிலையைக் கையில் ஏந்திக் கொண்டு உள் பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வருவார்.
இரு கை கூப்பி
பின்னர் இரு கைகளை கூப்பி அம்மனை வணங்கிவிட்டு தேங்காயை அர்த்தமண்டப வாசற்படியில் உடைப்பார். அப்போது பக்தர்கள் அந்த கோயிலின் கதவுகளையே பார்த்துக் கொண்டிருப்பர். உடனே சாத்தி வைக்கப்பட்டிருக்கும் அர்த்த மண்டப கதவுகள் இரண்டுமே திறந்து அந்த ஆயிரங்கண் மாரியம்மன், சுற்றியுள்ள மக்களுக்கு காட்சித் தருவார்.
பக்தர்கள் தீச்சட்டி
இந்த விழாவில் பக்தர்கள் தீச்சட்டி எடுப்பதும், அலகு குத்துவதும் பொம்மை செலுத்தியும் நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். அது போல் மாலையில் கோயில் முன்பு இரண்டு ஆள் உயரத்துக்கு அடுக்கப்பட்ட பல டன் விறகுகளுக்கு தீ மூட்டப்படும்.
பூக்குழி இறங்குதல்
அம்மனுக்கு வேண்டிக் கொண்ட பக்தர்கள் பூக்குழியில் இறங்குவர். பூக்குழிக்கு 4 பக்கங்களில் எல்லைக் கோடு போல் மல்லிகை பூச்சரங்கள் போடப்பட்டிருக்கும். ஆனால் அவை தீயின் அனலால் வாடாமலும், கருகாமலும் இருக்கும். பூக்குழி நிகழ்வுக்கு பிறகே அந்த பூச்சரங்கள் வாடி விடும்.
வாடாத மல்லிகை
பத்தாம் நாள் அன்று அம்மன் வீதியுலா நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பர். 11 ஆம் நாள் பூப்பல்லக்கு நிகழ்வும் வாண வேடிக்கையும் முளைப்பாரியும் நடைபெறும். இந்த கோயில் வடக்கு நோக்கி காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications