இந்த மனசுதான் கடவுள்! ஆடி அமாவாசையில் ஜானுவுக்கு திதி! அது யாரென்று கேட்டு திகைத்த புரோகிதர்
கடலூர்: கடலூரில் வீட்டில் வளர்த்து இறந்து போன நாய்க்கு ஆடி அமாவாசையையொட்டி திதி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜானு என்ற வளர்ப்பு நாய்க்கு திதி கொடுத்த போது குடும்பத்தினர் கண்ணீரில் மூழ்கிய சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை சேர்ந்தவர் சரவணன். இவர் லேபர் வகையை சேர்ந்த ஜானு என்ற நாயை வளர்த்து வந்தார். சுமார் 5 ஆண்டுகளாக வளர்த்து வந்த நிலையில் அந்த நாய்க்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்காமல் அந்த வாயில்லா ஜீவன் இறந்து போனது.

இதனால் குடும்பத்தினர் கலங்கி போனார்கள். வீட்டில் ஒரு குழந்தை போல் அங்கும் இங்கும் வலம் வந்த இந்த நாய் தற்போது இறந்துவிட்டதே என கண்ணீர் விட்டனர். இதையடுத்து அந்த நாயை தங்களுடைய சொந்த நிலத்தில் புதைத்து அதற்கான இறுதிச் சடங்குகளையும் செய்தனர்.
இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசை என்பதால் கடலூரில் உள்ள சில்வர் பீச்சில் சரவணனும் அவருடைய சகோதரர் சுந்தர பாண்டியன், தீபக் ஆகியோர் ஜானுவுக்கு கண்ணீருடன் திதி கொடுத்தனர். திதி கொடுத்த இடத்தில் புரோகிதரும் யாருக்கு திதி என கேட்ட போது நாங்கள் ஆசையாக வளர்த்த நாய் என கூறியதால் அவரும் நெகிழ்ச்சி அடைந்து திதி கொடுக்க வைத்தார்.
முன்னோர்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணங்கள், திதிகள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலமும் ஆத்ம சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக சொல்வதுண்டு.
அதிலும் இந்த ஆடி அமாவாசை நாளில் தந்தை வழி உறவுகளுக்கான சூரியனும் தாய் வழி உறவுகளுக்கான சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வந்து நிற்கும் நாள்தான் அமாவாசை. மற்ற கிரகங்களைவிட இந்த நாளில் பூமியில் சந்திரன், சூரியனின் ஆதிக்கம் முழுமையாக நிறைந்திருக்கும்.
ஆடி அமாவாசை அன்று கொடுக்கப்படும் தர்ப்பணங்கள் 48 தலைமுறைகளை சேர்ந்த முன்னோர்களை சென்றடையும். இந்த நாளில் மறைந்த முன்னோர்கள் பூலோகத்திற்கு வருவார்கள் என்பது ஐதீகம். அமாவாசை நாளில் சைவ உணவுகளையே சமைக்க வேண்டும். அமாவாசை விரதத்திற்கு சமைக்கும் போது கண்டிப்பாக பூசணிக்காய், அகத்திக்கீரை, வாழைக்காய் உள்ளிட்டவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications