திண்டுக்கல் அகரம் திருவிழா.. கோவில் வளாகத்தில் மட்டும் கொட்டிய மழை... நள்ளிரவிலும் பக்தர்கள் பரவசம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் இன்று அதிகாலை அம்மன் புஷ்ப விமானத்தில் உலா வந்தார். அம்மனை தரிசிக்க விடிய விடிய பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு கொண்டே இருந்தனர். அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில், கோவில் வளாகத்தில் மட்டுமே மழை கொட்டிக் கொண்டே இருந்தது பக்தர்களை நள்ளிரவிலும் பரவசப்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ளது அகரம் முத்தாலம்மன் கோவில். தாடிக்கொம்பை சுற்றிய பல்வேறு கிராமங்களுக்கு தாய் தெய்வமாக போற்றப்படுகிறது அகரம் முத்தாலம்மன் சுவாமி.

ஒவ்வொரு ஆண்டும் அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அனைத்து சுற்றுப்புற கிராம மக்களும் அகரம் முத்தாலம்மன் திருவிழாவில் பங்கேற்பதை வாழ்நாள் கடமைகளில் ஒன்றாக கடைபிடிக்கின்றனர்.
அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை நடத்துவதற்கு அம்மனின் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படும். அதாவது கோவில் வளாகத்தில் பல்லி எழுப்பும் சகுனம் மூலம் அம்மன் உத்தரவு கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை. கடந்த ஆகஸ்ட் 30-ந் தேதி அம்மனின் உத்தரவு (பல்லி சகுனம்) கிடைத்து திருவிழா ஏற்பாடுகள் தொடங்கின.

அகரம் முத்தாலம்மன் கோவில் சாமி சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 13-ந் தேதி இரவு தொடங்கியது. அப்போது முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கணம் கட்டி விரதம் இருந்து வந்தனர். கடந்த 13-ந் தேதி முதல் அம்மன் வீதி உலா வருதல், உற்சவர் மண்டபத்துக்கு எழுந்தருளுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

அகரம் கோவில் திருவிழாவின் முதன்மை நிகழ்ச்சியான அம்மன் கண் திறப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அம்மன், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களின் சரண கோஷங்களுடன் கொலு மண்டபம் வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் புஷ்ப விமானத்தில் உலா வந்து வானக் காட்சி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது விடிய விடிய வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன.
திண்டுக்கல் அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா pic.twitter.com/q818qBuALw
— மா.ச. மதிவாணன் (@masamathi) October 22, 2024

அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக நள்ளிரவிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக, ஊர் ஊராக, குடும்பம் குடும்பாக கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். நள்ளிரவில் கோவில் வளாகத்தில் மட்டும் மழை கொட்டித் தீர்த்தது. அகரத்தில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள தாடிக்கொம்பு, திண்டுக்கல் பகுதிகளில் சொட்டு மழையும் பெய்யாமல் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் மட்டுமே மழை கொட்டியதால் பக்தர்கள் நள்ளிரவிலும் பரவசமடைந்தனர்.












Click it and Unblock the Notifications