பழனி முருகன் கோவிலில் ரோப் கார், மின் இழுவை ரயில் சேவை அறிவிப்புகள் கிடைக்குமா? பக்தர்கள் குமுறல்!
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் ரோப் கார், மின் இழுவை ரயில்களுக்காக பல மணிநேரம் வீணாகக் காத்திருக்கும் நிலைமை உள்ளது. ரோப் கார், மின் இழுவை ரயில்கள் இயக்கம் குறித்து எந்த ஒரு முறையான அறிவிப்பும் வெளியிடாததால் ஒரே இடத்தில் கைக் குழந்தைகளுடன் பல மணிநேரம் காத்திருக்கக் கூடிய துயரம் உள்ளது. இதனால் ரோப் கார், மின் இழுவை ரயிலை நம்பாமல் வேறுவழியே இல்லாமல் மலையில் இருந்து கீழே பெரும் சிரமத்துக்கு இடையே நடந்தே வர வேண்டிய நிலைக்கு பக்தர்கள் தள்ளப்படுகின்றனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழனி (பழநி) மலை முருகன். பழனி மலை முருகனை தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவலில் பயணப்பட்ட பக்தர்கள் முறையான அறிவிப்புகள், நடவடிக்கைகள் இல்லாமல் பெரும் துயரத்தில் தள்ளப்படுகின்றனர்.

பழனி மலையில் முருகனை தரிசனம் செய்ய மலைப்பாதையில் நடப்பது பொதுவான வழக்கம். அதேநேரத்தில் மலைக்கு பக்தர்கள் எளிதாக சென்று வழிபாடு செய்யத்தான் மின் இழுவை ரயில் -விஞ்ச் மற்றும் ரோப் கார் வசதிகள் உள்ளன. கீழே இருந்து மலைக்கு சில நிமிடங்களில் விஞ்ச், ரோப் காரில் செல்வது புதிய அனுபவமாகவும் இருக்கிறது.
பழனி மலை முருகன் கோவிலில் தற்போது கூட்டம் அதிகமாக இல்லை. நேற்று காலையில் மின் இழுவை ரயிலுக்காக காத்திருந்தோம். எப்படியும் 10, 20 நிமிடத்தில் மின் இழுவை ரயில் புறப்படும்; டிக்கெட் கொடுத்துவிடுவார்கள் என காத்திருந்தோம். ஆனால் 1 மணிநேரத்துக்கும் மேலாக எந்த ஒரு காரணமும் சொல்லாமல் வரிசையிலேயே பக்தர்கள் காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால் ஆவேசப்பட்ட பொதுமக்கள் பணியாளர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் ஒருவழியாக மின் இழுவை ரயில் இயக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டம் இல்லாததால் முருகனை விரைவாக தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த பக்தர்களுக்கு மின் இழுவை ரயில், ரோப் கார் டிக்கெட் தரும் கவுண்ட்டர்களில் மீண்டும் பல மணிநேர காத்திருப்புதான் கிடைத்தது. மின் இழுவை ரயிலில் 45 நிமிடங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயணிகளுக்குதான் டிக்கெட் தரப்படுகிறது. அந்த 45 நிமிடம் காத்திருந்தும் டிக்கெட் கிடைக்காதவர்கள் மீண்டும் 45 நிமிடம் காத்திருக்க வேண்டும். ரோப் கார் டிக்கெட் கவுண்ட்டரிலும் இதே நிலைமைதான். இதனால் ரோப் கார், மின் இழுவை ரயில்களை நம்பி நேரத்தை வீணடிக்காத பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு இடையே மலையில் இருந்து கொளுத்திய வெயிலில் நடையாய் நடந்து இறங்க வேண்டியதானது.
ரோப் கார், மின் இழுவை ரயில் வசதிகள் என்பதே பக்தர்களுக்கானது. பழனி மலை முருகன் கோவிலில் அபிஷேகப் பொருட்களை வெறும் ரூ40-க்கு மட்டுமே வாங்குங்கள்; உங்கள் கைபேசிகளை ரூ5 கட்டணம் செலுத்தி காப்பகத்தில் வைக்கவும் என்றெல்லாம் 24 மணிநேரமும் இடைவிடாமல் அறிவிக்கும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம், ரோப் கார், மின் இழுவை ரயில் எத்தனை மணிக்குப் புறப்படும், எப்போது டிக்கெட் வழங்கப்படும்? அடுத்த ரோப் கார், மின் இழுவை ரயில் எத்தனை மணிக்குப் புறப்படும் என்கிற அறிவிப்புகளை வெளியிட்டால் பக்தர்கள் துயரம் நீங்குமே? இந்து சமய அறநிலையத்துறை கவனித்து உரிய நடவடிக்கை எடுத்தால் முருகனை தரிசனம் செய்தவர்கள் நிம்மதியோடு வீடு திரும்பலாம்.. இல்லை எனில் நம்மைப் போல புலம்பத்தான் முடியும்!

-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications