அன்னப் பறவைகள் தண்ணீரில் இருந்து பாலை தனியே பிரித்து குடிக்குமா? உண்மை என்ன?
சென்னை: அன்னப் பறவைகள் உண்மையாகவே நீரோடு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் தனியே பிரித்து பருகும் என்கிறார்களே, இது உண்மையா என்பதை தெரிந்து கொள்ளலாமா?
இதுகுறித்து சமூகவலைதளத்தில் பாலாஜி சீனிவாசன் என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: அன்னப்பறவைகள் உண்மையாகவே நீரோடு கலந்த பாலில் இருந்து பாலை மட்டும் தனியே பிரித்து பருகுமா?

அன்னமும்+பாலும்
அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும் என்பது நமக்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயம்.
ஏதோ அன்னப்பறவை என்று ஒன்று அந்தக்காலத்தில் இருந்ததாகவும், அது தண்ணீர் கலந்த பாலை வைத்தால் தண்ணீரைப் பிரித்து அப்படியே பாலை மட்டும் உறிஞ்சி விடும் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
நான் சில மிருகக் காட்சி சாலைகளில் அன்னப் பறவையைப் பார்த்தேன். அவற்றைப் பராமரிப்பவரிடம் இந்த அன்னத்திற்குப் பால் வைக்கிறீர்களா என்று கேட்டபோது, அவர் கிண்டலாகச் சிரித்தார்.
அன்னம் நீரில் உள்ள மீன்களையும் புழு பூச்சிகளையும் தின்று வசிக்கும் ஒரு உயிரினம் என்றும், பாலைச் சாப்பிடாது என்றும் தெரிவித்தார்.
எனக்கு ஒரு குழப்பம்.
நம் முன்னோர்கள் தப்பாகவா சொல்லியிருப்பார்கள் என்று.
சில நாட்கள் இதைப் பற்றியே சிந்தித்தேன்.
ஒரு நாள் சாப்பிடும்போது தோன்றியது அடடா, *அன்னம் என்பதற்கு* *அரிசிசாதம்* என்றும் ஒரு பொருள் உண்டே. *இதை* நாம்
*சிந்திக்கவில்லையே* என்று யோசித்தேன்.
பிறகு கொஞ்சம் சுடு சோறு கொண்டு வரச்சொல்லி,
அதில் கொஞ்சம் நீர் கலந்த பாலை ஊற்றினேன்.
அப்படியே வைத்துவிட்டு 5 நிமிடம் கழித்துப் பார்த்தபோது,
என்ன ஆச்சரியம்..
பால் முழுவதையும் சாதம் உறிஞ்சிக் கொண்டிருந்தது. தெளிந்த நீர் மட்டும் சாதத்தைச் சுற்றியிருந்த இடத்தில் வடிந்திருந்தது. உண்மையில் நான் கலந்த நீரை விட அதிகமாகவே வடிந்திருந்தது.
சரி நாம் உபயோகித்த பாலில் ஏற்கெனவே எவ்வளவு தண்ணீர் இருந்ததோ என்று நினைத்தேன். இதுதான் அன்னம் பாலையும் தண்ணீரையும் *பிரிக்கும்* கதை.
நீங்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வீட்டிலேயே செய்து பார்க்கலாம்.
மறுபடி சிந்தித்தபோது தான் அடடா, அன்னம் என்று தான் சொன்னார்களே தவிர, அன்னப்பறவை என்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அது நாமாக செய்து கொண்ட கற்பனைதான் என்று புலனாயிற்று. அன்னம் பாலையும் தண்ணீரையும் இப்படித்தான் பிரிக்கும் என தெரிந்து கொண்டேன். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications