ஆவணி மாத பவுர்ணமி! சோமவாரத்தில் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன தெரியுமா?
திருவண்ணாமலை: பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் இன்றைய தினம் பவுர்ணமியால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள "அண்ணாமலை" என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த மலையை சுற்றி சித்தர்களின் ஆசிரமங்கள், ஜீவசமாதிகள், குளங்கள் போன்றவை உள்ளதால் இந்த மலையை ஒரு முறை வலம் வந்தால் அனைத்து தெய்வங்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
நெருப்பு வடிவமாக சிவபெருமான் இருக்கும் இந்த திருவண்ணாமலையில் சித்தர்கள் இன்றும் கிரிவலம் வருகிறார்கள் என சொல்லப்படுவதுண்டு. இந்த அனுபவம் நிச்சயம் பக்தர்களுக்கு கிடைக்கும். சித்தர்கள் ஏதாவது ஒரு ரூபத்தில் பக்தர்களுக்கு தங்கள் இருப்பை காட்டுவார்கள் என்கிறார்கள்.
மாதாமாதம் பவுர்ணமி வந்தாலும் ஆகஸ்ட் மாதம் வரும் பவுர்ணமி அவிட்டம் நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் ஆவணி அவிட்டம் என்பதால் ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம். அதிலும் இந்த ஆண்டு பவுர்ணமி சிவனுக்குரிய திங்கள்கிழமையில் வருவது மிகவும் சிறப்பாகும்.
சிவனுக்குரிய விரதங்களில் சோமவார விரதம் முக்கியமானது. இன்றைய தினம் கிரிவலம் வரும் நேரம் அதிகாலை 2.58 மணிக்கு தொடங்கி நாளை 20ஆம் தேதி அதிகாலை 1.02 மணி வரை உகந்த நேரமாகும். இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம்.
இந்த கிரிவலம் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று பவுர்ணமியையொட்டி விடுமுறை தினமான நேற்றே பலர் திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டனர். இரு தினங்களுக்கு முன்னிருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications