திருச்செந்தூர் முருகன் கடலை பார்த்து ஏன் காட்சி தருகிறார் தெரியுமா? சுவாமியின் கையில் என்ன அது?
சென்னை: திருச்செந்தூர் முருகன் கடலை பார்த்து ஏன் காட்சி தருகிறார் என்பது தெரியுமா? அது போல் கோயிலில் மூலவரை பார்க்கும் போது ஒரு அமைப்பு நமக்கு உண்மையை உணர்த்துவது போல் இருக்கும் அதை நீங்கள் கவனித்தீர்களா?
இதுகுறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் மங்கையர்க்கரசி தனது ஆத்ம ஞான மையம் எனும் யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: 7 மயில் ஏறி விளையாடும் ஆறுமுக பெருமானின் ஆறுபடை வீடுகளின் சிறப்புகளை நாம் அறிந்து வருகிறோம். திருப்பரங்குன்றத்தில் உள்ள சிறப்புகளை சொன்ன பிறகே பலருக்கு இத்தனை சிறப்புகள் இருக்கின்றனவா என்ற ஆச்சரியம் இருந்தது.

இந்த பதிவில் 2ஆவது படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் குறித்து பார்க்கலாம். செந்திலாண்டவர் என்ற பெயரிலும் சுப்பிரமணிய சுவாமி என்ற பெயரிலும் சிவபெருமான் காட்சி தந்த அற்புதமான திருத்தலம் இது.
திருச்செந்தூர்
இந்த திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்க்கையில் என்ன நலம் கிடைக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். பிறவி எனும் பெருங்கடலில் வீழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும் பிறவாமை எனும் பெரும் பேற்றை அருள கூடியவர் செந்திலாண்டவர்.
செந்திலாண்டவர்
செந்திலாண்டவர் நமக்கு தரக் கூடிய கருணை பிறவாமை. பிறக்கவில்லை என்று சொன்னால் எதை பற்றிய கவலையுமே நமக்கு இல்லையே! பிறந்தால்தானே நாம் ஒவ்வொன்றை பற்றியும் யோசிக்க வேண்டும். பிறந்தால்தான் இன்பமாக இருத்தல் வேண்டும் என நினைக்கிறோம்.

வீடு, கார், நிலம்
வீடு, கார், நல்ல மனைவி, நல்ல கணவர், குழந்தைகள், பதவி, பணம், பெயர், கல்வி , ஞானம், முக்தி வேண்டும் என நினைக்கிறோம். பிறக்கவே இல்லை என்றால் எதை பற்றிய கவலையும் நமக்கு இல்லை. எதை பற்றிய சிந்தனையும் நமக்கு இல்லை. எனவே பிறவாமை கேட்கும் பெரும் வரத்தை நமக்கு பெற்றுத் தர கூடியவர் சுப்பிரமணிய சுவாமி.
சுப்பிரமணிய சுவாமி
சுப்பிரமணிய சுவாமி என்பது வேதத்தால் ஓதப்பட்டது.இதனால்தான் இங்குள்ள முருகப்பெருமான் பூஜாமூர்த்தி என்ற பெயருடன் இருக்கிறார். பூ என்றால் பூஜை செய்தல், ஜா என்றால் உண்டாக்குதல், சிவஞானத்தை உண்டாக்குவது பூஜா.
திருச்செந்தூர் முருகன்
திருச்செந்தூர் முருகனை பார்த்தாலே அவர் கையில் ஒரு மலர் இருக்கும். பஞ்ச லிங்கங்களை வைத்து பூஜை செய்கிறார் சிவபெருமான். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய 5 லிங்கங்களை வைத்து முருகப்பெருமான், தனது தந்தையை பூஜிக்கிறார்.

மந்திரங்கள்
அப்போது முருகர், ஓம் சிவாய நம, ஓம் சிவலிங்காய நம, ஓம் ஹவாய நம, ஓம் ஹவலிங்காய நம, ஓம் ஆத்மாய நம, ஓம் ஆத்ம லிங்காய நம, ஓம் ஷர்வாய நம- இவ்வாறு மந்திரங்களை கூறி மலர்களால் அர்ச்சிக்கிறார். திடீரென தேவர்கள் வந்து அழைத்ததும் கையில் இருந்த பூவுடன் அப்படியே திரும்பி காட்சி கொடுத்தார். இதனால்தான் திருச்செந்தூர் மூலவர் கையில் இன்றும் கூட பூ இருக்கும், அந்த பெருமானுக்கு பெயர் பூஜா மூர்த்தி. மலர் மாய கண்மங்களை பூர்த்தி செய்து சிவஞானத்தை உண்டாக்குவதுதான் பூஜா. அந்த பூஜா மூர்த்திதான் ஜெயந்தி நாதராகவும் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர் கோயிலின் அமைப்பு
வெற்றியை தரக் கூடியவர். திருச்செந்தூர் கோயிலின் அமைப்பு எப்படி இருக்கும் என்றால், சுவாமியை பார்க்க செல்லும் போது இறங்கி போக வேண்டும். செந்திலாண்டவரை பார்த்துவிட்டு திரும்பி வரும் போது மேலே ஏறி வருவது போல் இருக்கும்.

வாழ்க்கை ஏறுமுகம்
எவ்வளவு இறங்கிய வாழ்க்கை உள்ளவர்களாக இருந்தாலும் சரி, அந்த திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு வந்த பிறகு வாழ்க்கை ஏறுமுகமாகத்தான் இருக்கும் என்பதை காட்டுவதற்காகத்தான் ஆலயத்தின் அமைப்பு அப்படி இருக்கிறது. திருச்செந்தூர் சென்று வழிபடக் கூடிய ஒவ்வொரு அடியாருக்கும் கருணையை வாரி வழங்கக் கூடிய வள்ளலாக, வெற்றியை தருகிற ஜெயந்திநாதராக நம் ஒவ்வொவருக்கும் நன்மையை தரக் கூடிய செந்திலாண்டவரை வணங்கி வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருச்செந்தூர் கோயில்
இந்த திருச்செந்தூர் கோயிலில் சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இது. ஐப்பசி மாதத்தில் இங்கு நடக்கும் சூரசம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இது மட்டுமில்லாமல் ஆவணித் திருவிழா, மாசித் திருவிழா ஆகியவையும் நடக்கும். நாழிக்கிணறு எனும் தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் சுவையாக இருக்கிறது.

தூத்துக்குடி- நெல்லை
இந்த கோயில் தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ தூரத்திலும் நெல்லையில் இருந்து 52கி.மீ. தூரத்திலும் உள்ளது. மதுரை விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ. தூரத்தில் உள்ளது. முருக கடவுள் தேவசேனாதிபதியாக வடிவெடுத்து தீமையின் வடிவிலான சூரபத்மனை சம்ஹாரம் செய்த திருத்தலமாக இது உள்ளது. இந்த தலம் குறித்து சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
157 அடி உயரம்
இது 3 ஆயிரம் அடி பழமையான கோயிலாகும். 157 அடி உயரம் கொண்ட இந்த கோயிலின் கோபுரம், ஒன்பது ஸ்தலங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப் பெருமான் சூரனை ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றித் தெரிவிக்கும் விதமாக இந்த தலத்தில் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் காட்சி தருகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார்.

திருச்செந்தூர் முருகன் சன்னதி
இந்த திருச்செந்தூர் முருகன் சன்னதி கடலை பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மேற்கு கோபுரம் சுவாமிக்கு எதிரே கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழா நடைபெறும் போதும் முருகன் திருக்கல்யாணத்தின் போதும் நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் மேல ராஜா கோபுர வாசல் திறக்கப்படும். அந்த வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. ஆறு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில் பக்தர்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுகிறார்கள்.
கோயில் நடை
இந்த கோயிலின் நடை அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மார்கழி மாதங்களில் அதிகாலை 3 மணிக்கே நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு திருக்காப்பிடப்படும். கந்தசஷ்டி திருவிழாவின் போது ஒன்றாம் திருவிழா மற்றும் ஆறாம் திருவிழா அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும்.
தைப்பூசத்தன்று எப்போதும் திறந்திருக்கும்
தை பூசம் அன்று அதிகாலை 01.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு திருக்காப்பிடப்படும். பங்குனி உத்திரம் அன்று அதிகாலை 04.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு திருக்காப்பிடப்படும்.












Click it and Unblock the Notifications