சுடராக வந்த வேல் முருகா..பழனியில் பங்குனி உத்திரம்! கட்டணமில்லா தரிசனம்..பக்தர்களுக்கு செம அறிவிப்பு
திண்டுக்கல்: உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 10, 11, 12 ஆகிய மூன்று நாட்கள் கட்டணம் இல்லாத தரிசனம் செய்யலாம் என்று தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் 2 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புரவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில், ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசம் நிறைவடைந்த நிலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5ஆம் தேதி திரு ஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் துவங்கி திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான வருகின்ற ஆறாம் நாளான பத்தாம் தேதி முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வடிவமும், அதனை தொடர்ந்து வெள்ளி தேரோட்டமும் நடைபெறுகிறது.
பதினொன்றாம் தேதி ஏழாம் திருவிழா மாநகர அன்று மாலை 4:30 மணிக்கு திருத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடிகளை எடுத்து வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தைப்பூச திருவிழாவை போலவும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுப்பினர்.
இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கேள்விக்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து விதமான கட்டண தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பத்து நாட்களில் நாள்தோறும் 20000 பேர் என மொத்தம் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications