திண்டுக்கல்லுக்கே கொண்டாட்டம்.. அபிராமி அம்மனுக்கு திருக்கல்யாணம்! மனமுருகி நின்ற பக்தர்கள்..!
திண்டுக்கல்: புகழ்பெற்ற திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் நகரின் மத்தியில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான வரலாற்று சிறப்பு மிக்க பழமையான அருள்மிகு அபிராமி அம்மன் உடனமர் பத்மகிரீஸ்வரர் ஞானாம்பிகை உடனமர் காலஹத்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
பழமையான இந்த கோவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மிகச் சிறப்பாக புனரமைக்கப்பட்டது. இந்த கோவிலுக்கு திண்டுக்கல் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் 10ஆம் நாள் ஆன இன்று 08.05.25 பத்மகிரீஸ்வரருக்கும் அருள்மிகு அபிராமி அம்மனுக்கும் பக்தர்கள் முன்னிலையில் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பூணல் மாற்றுதல், வஸ்திரம் சாற்றுதல், மாலை மாற்றுதல், போன்ற வைபவங்கள் இனிதே நடைபெற்றது இதனை தொடர்ந்து பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மனுக்கு வியாழக்கிழமை காலை 10.20 மணியளவில் திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருக் கல்யாணத்தை காண வந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தாலிக் கயிற்றை மாற்றிக் கொண்டனர். திருக் கல்யாண வைபோகம் முடிவடைந்த உடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தலைவர் சரவணன், மாநகராட்சி மேயர் இளமதிஜோதி பிரகாஷ், தாசில்தார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமண வைபவத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபிராமி அம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேலுச்சாமி மற்றும் வீரக்குமார், சண்முகவேல், நிர்மலா, மலைச்சாமி உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன குடிநீர், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை சிறப்பாக செய்திருந்தனர்.
பாதுகாப்பு பணியில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். முன்னதாக மாப்பிள்ளை அழைப்பின் போது கோவில் முன்பு தீரன் வள்ளிக்கும்மி ஆட்ட கலைக்குழுவை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட கும்மியாட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications