Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றி தரும் வெற்றிலை மாலை.. கடன் தீர்க்கும் வெண்ணெய்.. அனுமன் பிறந்தநாளில் மறக்காதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுமன் பிறந்தநாளில் வெண்ணெயும், வெற்றிலை மாலையும் சாற்றி பய பக்தியுடன் வழிபட்டால், தடைபட்ட காரியங்கள் இனிதே முடியும். கடன் தொல்லையும் தீரும். நல்ல வேலையும், பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

அனுமன் ஜெயந்தி: மார்கழி அமாவாசை மூலம் நட்சத்திர நாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார் என இந்து புராணங்கள் கூறுகின்றன. தென் இந்தியாவில் நாளை மறுநாள் மார்கழி அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இப்பூவுலகம் உள்ளவரையில் சிரஞ்சீவியாக வாழ்ந்து வரும் ஏழு பேர்களில், ஆஞ்சநேயரும் ஒருவர்.

Hanuman jayanthi: Why Hanuman like Betel and Butter

வாயு புத்திரன்: ருத்ரனின் அம்சமாக, பஞ்சபூதங்களில் ஒன்றான வாயு பகவானின் மைந்தனாக, பஞ்சபூதங்களின் சக்தியையும் ஒருங்கே பெற்றவராக அவதரித்தவர். யாராலும் செய்ய முடியாத அசாத்தியமான செயல்களை எல்லாம் அநாயசமாக செய்பவர். எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம், அரூபமாக இருந்து அந்த ராம நாமத்தை கேட்டுக்கொண்டிருப்பவர்.

செல்லப்பிள்ளை: சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரே கடவுள். மனிதர்கள் முதல் நம்மை படைத்த கடவுள் வரை அனைவரையும் தன்னுடைய பார்வையால் நடுங்கச் செய்யும் சனீஸ்வரரையே ஆளைவிட்டால் போதும் என்று ஓட வைத்தவர். இதனாலேயே ஆஞ்சநேயரை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பிடித்தமானவர்.

பக்தி செலுத்துவது எப்படி: இறைவனிடத்தில் பக்தி செலுத்துவது எப்படி என்று பாடம் நடத்தியவர். தன்னுடைய பக்தியால் அந்த கடவுளையே பிரமிக்கச் செய்தவர். தன் மீது இப்படி கண் மூடித்தனமாக பக்தி செலுத்தவும் இவ்வுலகில் பக்தன் ஒருவன் இருக்கிறாரே என்று ஆச்சரியப்படுத்தியவர். அதனால் தான், ஸ்ரீராமர் தன்னுடைய அவதார நோக்கம் நிறைவடைந்த உடன், ஆஞ்சநேயரையும் தன்னுடன், வைகுண்டத்திற்கு வரும்படி வற்புறுத்தியும், அதை மறுத்துவிட்டு, தான் இப்பூவுலகிலேயே ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக்கொண்டு, பக்தர்களுக்கு நல்வழி காட்டிக்கொண்டிருப்பேன் என்று சிரஞ்சீவியாக இருந்து வருபவர்.

ராம பக்தன்: அனுமனை வழிபடுபவர்கள் பெரும்பாலும் வெண்ணெய் காப்பு செய்தும், வெற்றிலை மாலை சமர்பித்தும் வழிபடுவது வழக்கம். அசோகவனத்தில் சீதையை கண்ட ஆஞ்சநேயருக்கு வெற்றிலையை தூவி ஆசி வழங்கியதாலும், போரில் ஏற்பட்ட காயத்தினால் உண்டான வெம்மையை குறைக்கவும் ஆஞ்சநேயருக்கு சீதை வெண்ணெயை தடவியதாலும், ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பும், வெற்றிலை மாலையும் அணிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீராமனின் தூதவன்: அனுமன் பக்தர்கள் தங்கள் காரியம் வெற்றி பெற வெற்றிலை மாலை சாற்றி வேண்டி வழிபடுகின்றனர். அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அன்னை சீதா தேவியை தேடி அலைந்த ஆஞ்சநேயர் கடைசியில் அவரை இலங்கையில் அசோகவனத்தில் சிம்சுகா மரத்தடியில் சோகமே உருவாக இருந்ததைக் கண்டு கலங்கினார். தான் பகவான் ஸ்ரீராமபிரானின் தூதுவனாக வந்திருப்பதை விவரித்து, ஸ்ரீராமபிரான் கொடுத்த கணையாழியை சீதா தேவியிடம் கொடுத்து அவரிடம் இருந்து சூடாமணியை பெற்றுக்கொண்டார்.

வெற்றிலை மாலை: அன்னை சீதா தேவியிடம் விடைபெற்று கிளம்பும்போது, ஆஞ்சநேயரை ஆசீர்வதிக்க எண்ணினார். ஆனால், ஆசீர்வதிக்க அட்சதையோ புஷ்பங்களோ கிடைக்கவில்லை. அங்கே ஒரு வெற்றிலைக் கொடி படர்ந்திருந்ததைக் கண்ட ஆஞ்சநேயர், அதிலிருந்து சில வெற்றிலைகளை பறித்து மாலையாக கோர்த்து, அதை சீதா தேவியிடம் கொடுத்து, என்னை ஆசீர்வதியுங்கள் அன்னேயே என்று வேண்டி பணிந்து நின்றார்.

என்றும் சிரஞ்சீவி: ஆஞ்சநேயரின் சமயோசித புத்தியை கண்டு மகிழ்ந்த அன்னை சீதா தேவி, அந்த வெற்றிலை மாலையை ஆஞ்சநேயரின் கழுத்தில் அணிவித்து, என்றைக்கும் நீ சிரஞ்சீவியாக வாழ்வாயாக என்று ஆசீர்வதித்தார். அதன் காரணமாகவே, பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

ராவணனுடன் போர்: பகவான் கிருஷ்ணருக்கு வெண்ணெய் எப்படி பிடித்தமான ஒன்றோ, அதுபோலவே ஆஞ்சநேயருக்கும் வெண்ணெய் மிகவும் பிடித்தமான ஒன்று. இதற்கு காரணம் என்ன தெரியுமா?. அன்னை சீதா தேவியை காண ஆஞ்சநேயர் இலங்கையை சுற்றி வந்தபோது, ராவணனின் வீரர்கள் வைத்த நெருப்பு இவரை ஒன்றம் செய்யவில்லை. இருந்தாலும், அந்த வெப்பத்தின் தாக்கத்தால் அவருடைய உடல் சூடானது. அதோடு, ராவணனை எதிர்த்து ஸ்ரீராம பிரானும், லட்சுமணரும் போரிட்ட போது, ஆஞ்சநேயரும், தன்னுடைய வானரப் படைகளோடு சேர்ந்து ராவணனின் படையுடன் போரிட்டார்.

ஸ்ரீராமருக்காக பட்ட காயம்: அப்போது, ஆஞ்சநேயர் பிரமாண்டமான தோற்றத்தில் இருந்தைப் பார்த்த இலங்கை வீரர்கள், அவர் மீது பல்வேறு வகையான கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் ஏகப்பட்ட காயங்கள் உண்டானது. இருந்தாலும், இந்த காயங்கள் அனைத்தும் தன் இதயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீராமருக்காகத் தானே என்று நினைத்து அவற்றை கண்டுகொள்ளவில்லை.

சீதா தேவி: போரில் ராவணனைக் கொன்று, ஸ்ரீராம பிரான் சீதா தேவியை சிறையிலிருந்து மீட்ட உடன், இருவரையும் பணிந்து வணங்கினார் ஆஞ்சநேயர். அப்போது அவருடைய உடல் முழுவதும் இருந்த காயங்களைப் பார்த்து பதறிய அன்னை சீதா தேவி, வெண்ணெயைக் கொண்டு ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் பூசிவிட்டார். இதனால், அவரின் உடலில் இருந்து காயங்கள் மறைந்ததோடு, அவரின் உடலில் இருந்த வெக்கையும் தணிந்தது.

நோய்கள் நீங்கும்: அன்னை சீதா தேவியின் செயலால் மனம் நெகிழ்ந்த ஆஞ்சநேயர், தனக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களின் நோய் ஸ்ரீராம பிரானின் அருளால் முழுமையாக குணப்படுத்துவேன் என்று உறுதியளித்தார். அன்றிலிருந்து ஆஞ்சநேயரை தரிசிக்க செல்பவர்கள் வெண்ணெயை அவர் மீது சாற்றி வழிபடுகின்றனர்.

சக்தி ஆயுதங்கள்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த இரண்டு அசுரர்களை அழிக்க வேண்டி, தேவர்கள் ஆஞ்சநேயரை தேர்ந்ததெடுத்து அவருக்கு உரிய ஆயுதங்களையும் கொடுத்தனர். ஸ்ரீராமர் தன்னுடைய வில் அம்பையும், சிவபெருமான், பிரம்மா, பிற கடவுள்கள் சேர்ந்து சக்தி வாய்ந்த மற்ற ஆயுதங்களையும் கொடுத்தனர்.

நினைத்தது நிறைவேறும்:
ஸ்ரீகண்ணபிரான் வெண்ணெயை கொடுத்து, இந்த வெண்ணெய் உருகுவதற்குள், உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களை அழித்து நீதியை நிலைநாட்டுவாயாக என்று ஆசீர்வதித்தார். ஸ்ரீகண்ணபிரான் ஆசீர்வதித்தது போலவே, ஆஞ்சநேயரும் இரண்டு அசுரர்களையும் அழித்து வெற்றி வாகை சூடினார். இதனால் தான் பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் வெற்றியடைய ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுகின்றனர்.


கடன் நீங்கும்: எனவே அனுமன் பிறந்நாளில் வெண்ணெயும், வெற்றிலை மாலையும் சாற்றி ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால், தடைபட்ட காரியங்கள் இனிதே முடியும். கடன் தொல்லையும் ஒழியும். நல்ல உத்தியோகமும், பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+