சாம்பல் புதனுடன் தொடங்கும் கிறிஸ்தவர்களின் புனித தவக்காலம்...ஏப்.7ல் புனித வெள்ளி, ஏப்.9ல் ஈஸ்டர்
தவக் காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் நாளை தொடங்குகிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பல் பூசப்படும்.
சென்னை: இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாட, தங்களைத் தயாரிக்கும் வகையில் சாம்பல் புதனுடன் நாளைய தினம் 40 நாட்கள் தவக்காலம் தொடங்குகிறது. ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் ஏசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார். இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு தவக்காலம் சாம்பல் புதனுடன் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். மனிதன் மண்ணாக இருக்கிறான், மண்ணுக்குத் திரும்புவான் என்பதன் அடையாளமாக சாம்பல் பூசுதல் நடைபெறும்.
தவக்காலமான இந்த 40 நாட்களில், தான தர்மம் செய்ய, இறை வேண்டலில் ஈடுபட, நோன்பிருக்க கிறிஸ்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த 40 நாட்களில் முடிந்தவர்கள் ஒரு வேலை நோன்பு இருந்து, அசைவ உணவுகளைத் தவிர்த்து, ஏழைகளுக்கு உதவ அழைக்கப்படுகின்றனர். முடியாதவர்கள் சாம்பல்புதன், புனித வெள்ளி அன்று அசைவ உணவு தவிர்த்து, ஒருவேளை நோன்பு இருக்கவேண்டும்.
கிறிஸ்துவத்தில் 40 என்பது மிக முக்கியமான எண்ணாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தங்களைத் தாங்களே அன்பு செய்ய, தங்களை நேசிப்பது போல பிறரை நேசிப்பது எப்படி என்று உணர்ந்துகொள்ள இந்த 40 நாட்கள் தவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, இந்த நாட்களில் அடுத்தவர் மீது உள்ள அன்பை தர்மம் செய்வதன் மூலம் வெளிப்படுத்த வேண்டும். கடவுளின் அன்பைப் பெற இறை வேண்டல் செய்ய வேண்டும். நம் உடலை அன்பு செய்ய நோன்பிருக்க வேண்டும்.
நோன்பிருக்கும் போது அது யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொல்கிறார். நோன்பிருக்கிறேன் என்பதற்காக பழைய ஆடையை உடுத்துவது, முகத்தை வாட்டமாக வைத்துக்கொள்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது. வழக்கம் போல எந்த வித்தியாசத்தையும் வெளிப்படுத்தாமல் நோன்பிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 40 நாட்கள் தவக்காலம் கடந்த புதன் கிழமை சாம்பல் புதனுடன் நாளைய தினம் தொடங்க உள்ளது. நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நாளை காலை 6.30 மணிக்கு சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற இருக்கிறது. இதில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொள்கிறார். இதேபோல மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற இருக்கிறது. குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் சாம்பல் புதன் தின சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் நாளை மாலை நடைபெற உள்ளது. தவக்காலத்தையொட்டி 24, 25, 26-ந் தேதிகளில் குமரி சி.எஸ்.ஐ. பேராயம் சார்பில் நற்செய்திப் பெருவிழாவும் நடத்தப்பட உள்ளது.
சாம்பல் புதன் தினத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். இந்த நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும். ஏசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுவார். அந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாகவும், ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவாகவும் கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான தவக்காலம் நாளை தொடங்க உள்ள நிலையில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி, இறுதியில் ஏப்ரல் 9ம் தேதி ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு தினம் கொண்டாடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications