வியாழக்கிழமையில் துளசி மாலை, பஞ்சகச்சத்தில் திருப்பதி ஏழுமலையான்! உண்டியல் காணிக்கை எவ்வளவு?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 12 மணி முதல் 18 மணி நேரமானதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 12 அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பின.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள். மேலும் இன்று முதல் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இது 9 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெறும்.

இந்த நிலையில் திருப்பதி பெருமாளை தரிசிக்க 3 மாதங்களுக்கு முன்பு ரூ 300 டிக்கெட்டை புக் செய்வது முக்கியம். இதுதான் தற்போதைய நடைமுறை. ஜனவரி மாதம் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் அக்டோபர் 24 ஆம் தேதி அதற்கான புக்கிங் தொடங்கும். அப்போது புக் செய்து கொள்ளலாம். அது போல் தோமலா சேவை, ஆர்ஜித சேவை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கு புக்கிங் 3 மாதங்களுக்கு முன்பே நடைபெறுகிறது.
இந்த ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை பெற முடியாவிட்டால் தர்ம தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வழிமுறைகளிலும் பெருமாளை தரிசிக்கலாம். இலவச தரிசனத்திற்கு கூண்டிற்குள் அடைய விருப்பமில்லாவிட்டால் கூட்டத்தை பொருத்து குறிப்பிட்ட நேரத்தை டேகில் அச்சிட்டு தேவஸ்தானம் சார்பில் கொடுக்கிறார்கள்.
அதை பெற்றுக் கொண்டு அதில் குறிப்பிட்ட நேரத்தில் வரிசையில் போய் நின்றால் சுவாமியை தரிசிக்கலாம். அது போல் திவ்ய தரிசனம் என்றால் அலிபரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைபாதைகளில் திருமலைக்கு செல்வது. இந்த புரட்டாசி மாதம் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி எத்தனை பேர் பெருமாளை தரிசித்தனர் என்பதை பார்க்கலாம். நேற்று ஒரு நாளில் 63,376 பேர் பெருமாளை தரிசனம் செய்தனர். 21,146 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 3.56 கோடி கிடைத்துள்ளது. அது போல் டைம் ஸ்லாட் மூலம் சர்வ தரிசன டிக்கெட் வாங்காமல் கூண்டில் அடைப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் ஆனது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் 12 அறைகளும் நிரம்பின. பயணியர் தங்கும் விடுதி வரை வரிசை நீண்டிருந்தது. இந்த தகவல்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருந்தது. வியாழக்கிழமை தோறும் பெருமாள் நகைகள் இல்லாமல் வெறும் துளசி மாலை, பஞ்சகச்சத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications