சித்திரை தேரோடும் மதுரையிலே..மணக்கோலத்தில் மாசி வீதிகளில் உலா வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மதுரை: சித்திரை தேரோட்டம் காரணமாக மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. புதுமணத்தம்பதிகளாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடை திருத்தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வருவதைக் காண குவிந்துள்ளனர். சித்திரை தேரோடும் எங்கள் சீரான மதுரையில் அம்மையும் அப்பனும் மக்களை காண மணக்கோலத்தில் வீதி உலா வரும் அழகை வர்ணிக்க வார்த்தையில்லை.

மதுரை சித்திரை திருவிழா கடந்த பத்து நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. மேற்கு வடக்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மேடை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, மரிக்கொழுந்து உள்ளிட்ட உள்ளூர் ரகப் பூக்களும், பெங்களூரு ரோஸ், வெளிநாட்டிலிருந்து தாய்லாந்து ஆர்க்கிட் மற்றும் பல வண்ண மலர்கள் உள்பட சுமார் 10 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இவர்களுக்கு உதவி செய்யும் பூக்கள் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ஈடுபட்டனர். வாழைமரத் தோரணங்களும் கோயில் வளாகம் முழுவதும் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டது.

இந்த திருக்கல்யாணத்தில் கட்டண தரிசனம் 6 ஆயிரம் பேர், கட்டணமில்லா தரிசனம் 6 ஆயிரம் பேர் என மொத்தம் 12 ஆயிரம் பேர் அமரும் வகையில் தகரப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தன. குடும்பம் குடும்பமாக தங்கள் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பது போல பக்தர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.
திருக்கல்யாணத்தில் பங்கேற்ற திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய் பெருமாள் நேற்று மாலையில் திருப்பரங்குன்றத்திலிருந்து புறப்பாடாகி இன்று அதிகாலை 6 மணியளவில் கோயிலை வந்தடைந்தனர். மீனாட்சி அம்மன் சார்பில் ஒரு அர்ச்சகரும் சுந்தரேஸ்வரர் சார்பில் ஒரு அர்ச்சகரும் பங்கேற்று மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் மீனாட்சி அம்மனுக்கும் பிரியா விடை அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. அப்போது திருமணமான பெண்கள் தங்களின் தாலியை புதுப்பித்துக்கொண்டனர்.

தன்னுடைய வீட்டில் கல்யாணம் நடந்தால் எப்படி ஒரு விருந்து வைத்து வந்து சாப்பிடுவார்களோ அதே போல் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு வந்த பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் காலையில் சப்பாத்தி, கிச்சடி, கேசரி, வடை போன்ற உணவுகளும் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், கேசரி, உளுந்தவடை, போண்டா, பஜ்ஜி, வெஜிடபிள் புலாவ் என ஒன்பது வகையான உணவுகள் பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். விருந்து சாப்பிட்ட பலரும் மொய் எழுதி தாம்பூலம் பெற்றுச்சென்றனர்.
சித்திரை திருவிழாவின் 11ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் தனித்தனித் தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் உலா வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். புதுமணத்தம்பதிகளாக அம்மையும் அப்பனும் திருத்தேரில் உலா வருவதை தரிசனம் செய்ய மாசி வீதிகள் எங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மீனாட்சியாக அலங்கரிக்கப்பட்ட சிறுமிகளை பெற்றோர்கள் தோள்களில் தூக்கி வைத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம் காரணமாக மதுரையில் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறார். நாளைய தினம் எதிர்சேவை நடைபெற உள்ளது. வரும் 5ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications