மதுரை சித்திரை திருவிழா! வாராரு வாராரு! நாளை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு புறப்படும் கள்ளழகர்
மதுரை: மதுரையில் சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் நாளை அழகர்மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் ஏப்ரல் 21 ஆம் தேதி தேதியும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ஏப்ரல் 23 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இந்த சித்திரை திருவிழா வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. முதல் நாளான நேற்று மாலை தோளுக்கினியான் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினார்.
அப்போது நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. வரும் 21 ஆம் தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து சுவாமி சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார்.
வரும் 22 ஆம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறும். அன்று இரவு தல்லாங்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தங்குகிறார். 23 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார். இந்த நாளில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இது பாரம்பரியமிக்க முறைபடி தண்ணீர் பீய்ச்சி அடிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது வரும் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் வைபவம், அண்ணா நகர் வழியாக பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளும் நிகழ்வுகள் நடைபெறும்.
இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சுவாமி தங்குகிறார். வரும் 24 ஆம் தேதி வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் மோட்சம் அளிக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். 25 ஆம் தேதி பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருள்கிறார். 26 ஆம் தேதி கள்ளழகர் மதுரையிலிருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். வரும் 27ஆம் தேதி இருப்பிடம் சேருகிறார். 28ஆம் தேதி உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.












Click it and Unblock the Notifications