Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாசுரங்கள் - 27 Margazhi,thiruppavai pasuram 27

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாவை நோன்பிருக்கும் பெண்கள் விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான உணவு சாப்பிடுகிறார்கள்.

திருப்பாவை பாசுரம் - 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
நெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

Margazhi Pavai Nonbu : Thiruppavai 27, Thirupallieluchi Pasuram 7

பாடல் பொருள்: எதிரிகளை வெற்றி கொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம் என்று பாடுகின்றனர் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

விளக்கம்: கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது.

விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள்.

பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். ""கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.

திருப்பள்ளி எழுச்சி பாடல் - 7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு, இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்து அருளும்
மதுவளர் பொழில் திருஉத்திர கோச
மங்கையுள்ளாய் திருப்பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

சிவனை பாடி வணங்கும் அனுபவம் பழத்தினைப் போன்று இனிப்பாகவும், அமுதம் போன்று தெவிட்டாததாகவும், அடியவர்களுக்கு எளிதாகவும், ஏனையோருக்கு அரிதாகவும் இருப்பதை, அறிவில் சிறந்த தேவர்களாலும் வரையறுத்து கூற இயலவில்லை.

இவ்வுலகத்தில் இப்பிறப்பிலே வந்து அமைந்ததாகிய உடலாகிய இது சிவபெருமானது திருமேனியாகத் திகழுமாறும், இவ்வுடம்பில் விளங்கும் உயிராகிய இவன் அவனாகிய சிவமாக விளங்குமாறும் அருளி நின்று எங்களை ஆட்கொண்டருள்வாயாக.

தேன் சிந்தும் மலர்களை உடைய சோலைகள் சூழ்ந்த, திருஉத்திர கோச மங்கை என்னும் தலத்தில் எழுந்திருக்கும் இறைவனே, திருப்பெருந்துறையின் அரசனே!.. இறைவா, நீ எங்களை ஏவல் கொள்ளும் முறைமை எது? அந்த முறைமையைக் கேட்டு அவ்வாறே ஒழுகுவோம். எம் பெருமானே, பள்ளியிலிருந்து எழுந்து அருள்வாயாக என்று பாடுகிறார் மாணிக்கவாசகர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+