திருப்பதி கோயிலில் இனி லட்டு மட்டுமல்ல.. ’மசால் வடை’ பிரசாதமும் உண்டு.. இன்று முதல் அமல்
திருப்பதி: திருப்பதியில் இன்று முதல் பிரசாதத்துடன் மசால் வடை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரத சப்தமியையொட்டி பக்தர்களுக்கு அன்ன பிரசாதத்துடன் மசால் வடை வழங்கப்படுகிறது. இதேபோன்று ரத சப்தமிக்கு 3 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் 8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ரத சப்தமியையொட்டி இன்று விஐபி மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவும் உலகப் புகழ் பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதி தேவஸ்தானம் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 42 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறது. இந்த அன்னதானத்தில் வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல், சட்னி, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகள் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த உணவுடன் மசால் வடையும் சேர்த்து வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த வாரம் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் இந்த வடையானது தயார் செய்யப்பட்டது. சோதனை அடிப்படையில் அப்போது 5,000 பக்தர்களுக்கு மசால் வடை வழங்கப்பட்டது. பக்தர்கள் திருப்தியடைந்ததை அடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திருப்பதியில் அன்ன பிரசாதத்துடன் மசால் வடையும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று முதல் பிரசாதத்துடன் மசால் வடையும் சேர்த்து வழங்கப்படுகிறது.
அதுபோக இன்று ரத சப்தமி விழா திருப்பதியில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீதேவி, ஸ்ரீதேவியருன் உற்சவர் மலையப்ப சாமி 7 வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். சூரிய பிரபை, சந்திர பிரபை, தங்க கருட சேவை உள்ளிட்ட 7 வாகனங்களில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து அருள்பாலிக்கிறார். ஒரே நாளில் 7 வாகனங்களில் வீதியுலா நடக்கின்றதால் சின்ன பிரம்மோற்சவம் எனவும் அழைக்கப்படுகிறது.
இதனால் இன்று வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருவை தருவார்கள். சுமார் 3 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று தேவஸ்தானம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்று லட்டுக்களும் அதிகளவில் தயார் செய்யபப்ட்டுள்ளன. சுமார் 8 லட்சம் லட்டுக்கள் இன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் காரணமாக இன்று பாதுகாப்பு பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தேவஸ்தான கண்காணிப்பு படயினர் 1,000 பேரும், 1250 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications