மாசி மகம் தேரோட்டம்..திருச்செந்தூரில் கோலாகலம்.. அலைகடலென திரண்டு வந்து வடம் பிடித்த பக்தர்கள்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை: மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அலைகடலென திரண்டு வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 25ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரண்டாம் ஆம் நாளன்று சுவாமி சிங்க கேடயச் சப்பரத்திலும், அம்மாள் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்தனர். தூண்டுகை விநாயகர் கோவில் அருகே உள்ள ஆண்டியப்பபிள்ளை மண்டபத்தில் சுவாமி குமரவடங்கப்பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்ககேடயச் சப்பரத்திலும் வீதி உலா வந்த போது திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 4ஆம் நாள் திருவிழாவாக காலை முருகன் வெள்ளி யானை சப்பரத்திலும் அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் பவனி வந்தனர்.
ஏழாம் நாள் திருவிழா மற்றும் எட்டாம் நாள் திருவிழாவில் மட்டுமே பிரதான உற்சவர் சண்முகக் கடவுளின் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கின்றது. ஏழாம் திருவிழா அன்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் 5.00 மணிக்குள் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை சண்முகர் வெட்டிவேர் சப்பரத்தில் அருள்பாலித்தார். மாலை நான்கு மணிக்கு மேல் சுவாமி தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தியில், சிகப்புப் பட்டாடைகளாலும் சிகப்பு மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிவபெருமானும் தானும் ஒருவரே என்பதைக் குறிப்பாக உணர்த்தும் விதத்தில் முருகப்பெருமான் இவ்வாறு காட்சி அளித்தார்.
எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தியில் சண்முகர் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். படைக்கும் தொழிலைப் புரிகின்ற பிரம்மாவும் நானே என்பதை உணர்த்தும் விதத்தில் இவ்வாறு வலம் வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சண்முகரை அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் எழுந்தருளினார்.
காத்தல் தொழிலைச் செய்கின்ற திருமாலும் நானே" என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்சி தருகிறார். பச்சை சாத்தியில் வருகின்ற முருகப்பெருமானை லட்சக் கணக்காண பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்து தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். 9ஆம் திருநாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மாசி திருவிழாவின் 10ஆம் திருநாளான இன்று காலை 6.30 மணியளவில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது. முதலில் விநாயகர் தேர், 2வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக நான்கு வெளி வீதிகளில் பவனி வந்தரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாசி திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அலைகடலென திரண்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். நாளைய தினம் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர்.
இதனையொட்டி செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் நடக்கிறது. அங்கு 10.30 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஐப்பசி மாதம் நடைபெற்ற கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவிற்குப் பிறகு மாசி மகம் திருவிழாவைக் காண திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அலகு குத்தியும் காவடிகள் எடுத்து வந்தும் முருகப்பெருமானை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications