சகல நன்மைகளை அருளும் நவராத்திரி.. விரதம் இருந்து அம்மனை வணங்கினால் என்னென்ன நன்மைகள்?
மதுரை: நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பத்து நாட்களும் பண்டிகை கொண்டாடப்படும் இந்த நாட்களில் தினம் தினம் ஒரு அலங்காரம் செய்து அம்மனை வழிபடுவார்கள். நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் பற்றியும், பத்து நாட்களும் விரதம் இருந்து அம்மனை வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகைளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகை நவராத்திரி பண்டிகையும், அதைத் தொடர்ந்து பத்தாம் நாளில் நடைபெறும் தசரா பண்டிகையும் தான். பெண் தெய்வத்தைப் போற்றி வணங்கும் திருவிழாக்களில் முதலிடம் வகிப்பது இந்த நவராத்திரித் திருவிழா தான். மற்ற திருவிழாக்கள் எல்லாம், ஓரிரு நாட்களில் முடிந்து விடும். ஆனால் நவராத்திரித் திருவிழா மட்டும் தான் ஒன்பது நாட்கள் நடைபெறும் என்பது இதன் சிறப்பாகும். சங்க இலக்கியங்களில் கூட தசரா எனப்படும் விஜய தசமி நாளில் தான் எதிரி நாட்டின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இவ்விழாவின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
நவராத்திரித் திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டாலும், அனைத்து இடங்களிலும் ஒரே பெயரில் கொண்டாடப்படுவது கிடையாது. ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப, அந்தந்த இடங்களில் உள்ள கலாச்சார சூழ்நிலைகளுக்கு ஏற்றவாரும், பாரம்பரிய முறைப்படியும் பழங்காலந்தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பது இத்திருவிழாவின் சிறப்பம்சமாகும். நடப்பு ஆண்டு நவராத்திரித் திருவிழா வரும் செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி காலத்தில் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..அம்மனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்
நவராத்திரி பண்டிகை
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததெல்லாம், புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி மட்டுமே. ஆனால், உண்மையில் ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன என்பது நம்மில் பலரும் அறியாதது. கோடையின் துவக்கமான பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி. இரண்டாவதாக ஆனி மாத அமாவாசை முதல் அடுத்த ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி விழா.
சாரதா நவராத்திரி திருவிழா
மூன்றாவதாக, நாடு முழுவதும் பெருவாரியாகக் கொண்டாடப்படுவது, புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை முதல் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படும் சாரதா நவராத்திரித் திருவிழாவாகும். நான்காவதாக, தை மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படும் ஷ்யாமளா நவராத்திரி விழாவாகும்.
கொலு வைத்து கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் பெரும்பாலான வீடுகளிலும், கோயில்களிலும் நவராத்திரி கொலு வைத்து நாள்தோறும் வெகு சிறப்பாக பூஜைகள் செய்து கொண்டாடுவதுண்டு. தென் தமிழகத்தில் தூத்துகுடி மாவட்டத்தில் உள்ள குலசேகர பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் நவராத்திரித் திருவிழா தசரா என்னும் பெயரில் பத்து நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதுண்டு.
மைசூரு தசரா
அதே போல், கர்நாடக மாநிலம் மைசூரில் தசரா விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். நவராத்திரி என்றதும் முதலில் நம் நினைவுக்கு வருவது கொலு பொம்மைகள் தான். ஆனால், உண்மையில் நவராத்திரித் திருவிழாவில் கொலு பொம்மை வைத்து வழிபடுவது ஒரு அங்கம் மட்டுமே. இந்நாட்களில் சக்தி வழிபாடு எனப்படும் அம்பாள் வழிபாடு தான் மிக முக்கிய வழிபாடு ஆகும். அதற்கு முக்கிய காரணம், அனைத்திலும் அன்னை ஆதிபராசக்தியே நிறைந்து விளங்குகிறாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு பொம்மை வைத்து வழிபடப்படுகிறது.
முப்பெரும் தேவியர்கள்
நவராத்திரித் திருவிழா என்பது அன்னை உமாதேவியை, முதல் மூன்று நாட்களுக்கு சக்தியை அருளும் அன்னை பார்வதியாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு செல்வத்தை அருளும் மஹாலட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்களில் கல்விக்கு அதிபதியான அன்னை சரஸ்வதியாகவும் உருவகப்படுத்தி, முப்பெரும் தேவியர்களாக வணங்கி கொண்டாடுவதாக சொல்லப்பட்டாலும், உண்மையில் அன்னையை நவசக்திகளாக பாவித்து, குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என ஒன்பது சக்திகளாக பாவித்து பூஜித்து, இந்த ஒன்பது சக்திகளுக்கான மூல காரணியான பராம்பிகையை உரிய முறையில் தியான மந்திரங்களால் தியானித்து, பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் ஆகியவற்றை செய்ய வேண்டும்.
புராணங்களில் கொண்டாட்டம்
இந்துக்கள் அனைவரும் நவராத்திரி நாட்களில் கூடுமானவரை, அன்னை பார்வதியை மனமுருக வேண்டி பாராயணம் செய்வது அன்னைக்கு மற்றற்ற மகிழ்ச்சியைத் தரும். நவராத்திரித் திருவிழா பற்றி சில குறிப்புகளை நாம் அனைவரும் அறிந்து கொள்வது முக்கியமாகும். நவராத்திரித் திருவிழாவை முதன் முதலில் கொண்டாடியது திரேதா யுகத்தில் ஸ்ரீராமபிரான் தான் என்று புராணங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. நவராத்திரி விழாவைப் பற்றி தேவி புராணத்தில் விளக்கமான குறிப்புகள் காணப்படுகின்றன.
அரசு விழா
தமிழகத்தில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் நவராத்திரித் திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது நாயக்கர் காலத்தில் தான் மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் ஒன்பது நாள் திருவிழாவாக மாறியது. இவ்விழா நாட்களில் மக்களிடம் வரி வசூலிக்கும் நடைமுறையை விஜயநகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள். அக்காலத்தில் நவராத்திரித் திருவிழாவை அரசர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்து வந்தது, திருமலை நாயக்கர் காலத்தில் தான், இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி விழாவைக் கொண்டாடும் உரிமை வழங்கப்பட்டது. இந்நிகழ்வே, தமிழகத்தில் நவராத்திரித் திருவிழா மக்களிடம் பரவ வழி வகுத்தது.
பூஜை செய்வது எப்படி?
நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். இந்நாட்களில், மாலை 7 மணி முதல் இரவு 9:30 மணி வரை தேவி வழிபாட்டுக்கு உகந்த நேரமாகும். எம்பெருமான் ஈசனாரும், அன்னை பார்வதி தேவியும் இணைந்து ஊஞ்சலில் ஆடும் தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்ததன் முழு பலனும் கிடைக்கும். நவராத்திரி நாட்களில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரீவரின் பரிபூரண அருளாசியைப் பெறலாம். அன்றைய நாளில் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தையும், நவாக்சரி மந்திரத்தையும் ஓதி வழிபட கூடுதல் நன்மைகள் உண்டாகும்.புரட்டாசி மாதம் என்பது எமதர்மனின் கோரைப்பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. ஆகவே, எமதர்மனின் பாதிப்பில் இருந்து தப்பிக்கவே நவராத்திரித் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அம்மனுக்கு தினசரி பூஜை
நவராத்திரி நாட்களில் தினமும் பகல் வேளையில் 1008 சிவ நாமாவளிகளை மனதிற்குள் உச்சரித்து வழிபட்டால் சகல நன்மைகளும் கிட்டும். நவராத்திரி பூஜையை தினமும் தொடங்கும் போது, ஸ்யவன மகரிஷியையும், சுகன்யா தேவியையும் முழுமனதோடு தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும். நவராத்திரி பூஜையை முழுமையாகச் செய்து சுகன்யா தேவி என்பவள் அனைத்துவித நன்மைகளையும் பெற்றாள் என்பது நம்பிக்கை.
குடும்ப ஒற்றுமை தரும் நவராத்திரி பூஜை
நவராத்திரி நாட்களில் அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது முக்கியமாகும். அப்படிச் செய்தால், குடும்பத்தில் ஒற்றுமையும் செல்வ வளமும் பெருகும். அதை விடுத்து, சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அப்படிச் செய்தால் எதிர்மறையான பலன்களே ஏற்படும். நவராத்திரித் திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று ஸ்ரீஆயுர் தேவியைப் போற்றி வழிபட வேண்டும். இதுவே நவராத்திரித் திருவிழாவின் முழுநிறைவான பூஜையாகும்.