தட்டில் காணிக்கை வேண்டாம்..உண்டியலில் போடுங்கள்..ராமேஸ்வரம் கோவிலில் உத்தரவு..சோபனா ரவியின் பதிவு
அர்ச்சகர் தட்டில் காணிக்கை போடக் கூடாது, உண்டியலில் மட்டும் தான் போட வேண்டும் என ராமேஸ்வரம் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அர்ச்சகர்களின் தட்டில் காசு போடாமல் உண்டியலில் மட்டுமே காசு போட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பிரபல கோவில்களில் அர்ச்சகர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சம்பளம் அளிக்கப்படுகிறது. எனவேதான் பக்தர்கள் காணிக்கை பணத்தை உண்டியலில் செலுத்தினால் அது கோவில் புனரமைப்பு, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்ய முடியும் என்ற காரணத்தினால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கையை செலுத்தாமல் உண்டியலில் பணத்தை செலுத்துங்கள் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்களில் அர்ச்சகர்கள் தீபாராதனை தட்டுக்களில் யாரும் பணத்தை செலுத்துவதில்லை. அங்கு உண்டியல் காணிக்கை மட்டுமே உள்ளதால் தினசரியும் கோவிலுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. அதே நேரத்தில் கேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் ஆயிரக்கணக்கில் டிக்கெட் எடுத்தாலும் அர்ச்சகர்கள் தட்டில் காணிக்கை போட்டால் மட்டுமே பிரசாதம் கிடைக்கும். துலாபாரத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் செலுத்தினாலும் துலாபாரம் செலுத்தும் இடத்தில் பணியாளர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
மொட்டை அடிக்கும் இடங்களில் இலவசம் என்று திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட ஆலயங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தாலும் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு கையில் ஒரு 50 ரூபாய் கொடுப்பது வழக்கமானதாகவே உள்ளது. கோவில் உண்டியலில் காசு போடுவது, ஆலயத் திருப்பணிக்கு உதவும். தட்டில் காசு போடுவது அர்ச்சகரின் பசியைப் போக்கும் என்பது பெரியவர்களின் கருத்தாக உள்ளது.
ராமேஸ்வரம் போன்ற மிகப் பெரிய திருத்தலங்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு சம்பளமும், இதர சௌகரியங்களும் நிறைவாகக் கிடைக்கும். சாதாரண நிலையில் உள்ள ஆலயங்களில் அர்ச்சகரின் வருமானம் குறைவாக இருக்கும்.
எனவேதான் ஆரத்தி காண்பித்த உடன் தட்டில் காணிக்கை செலுத்துகின்றனர் பக்தர்கள்.
ஒருசில ஆலயங்களில் ஒருகால பூஜைக்குக்கூட வருமானம் இருக்காது. வறுமை நிலையிலும் ஆண்டவனுக்குத் தொண்டு செய்வதையே தங்கள் லட்சியமாகக் கொண்டு வாழும் அர்ச்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று தோன்றுகிறதோ, அதனைச் செய்யுங்கள். அடியவர்களுக்குச் செய்யும் தொண்டு, ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டிற்குச் சமமானது. அர்ச்சகரின் ஆரத்தித் தட்டில் காசு போட்டாலும், ஆலய உண்டியலில் காணிக்கை செலுத்தினாலும், அல்லது இரண்டையுமே செய்தாலும் புண்ணியம்தான் என்று பெரியவர்கள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் எந்த கோவிலிலும் காணிக்கை பணத்தை உண்டியலில் மட்டுமே போட வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால் ராமேஸ்வரம் கோவிலில் மட்டுமே பணத்தை உண்டியலில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர். அதை சில பக்தர்கள் கேட்டாலும் பல பக்தர்கள் உண்டியலிலும் பணத்தை செலுத்துவதோடு அர்ச்சகர்கள் தட்டிலும் காணிக்கை செலுத்துகின்றனர்.
சமீபத்தில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்றிருந்த பிரபல செய்தி வாசிப்பாளர் சோபனா ரவி, தனக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ராமநாதஸ்வாமிக்கு வில்வமாலையும் அம்பாள் பர்வதவர்த்தினிக்கு சிவப்புரோஜா மாலையும் வாங்கிக் கொண்டேன். ஸ்வாமியை தரிசித்துவிட்டு வரிசையில் அம்மன் சன்னிதிக்கு வந்த போது நெற்றியில் விபூதியும் குங்குமமுமாக வேட்டிசட்டையில் இரண்டுபேர் உள்ளேவருவோரிடம் " காணிக்கையை உண்டியலில் போடுங்கள். தட்டில் போடவேண்டாம்," என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். "ஏன்," என்பது போல் அவர்களைப் பார்த்தேன். இருவரும் பார்வையைத் திருப்பிக் கொண்டார்கள். வரிசை மெதுவாக நகர்ந்தது. எனக்குத் தெரிந்த அம்பாள் கீர்த்தனைகளை முணுமுணுத்துக்கொண்டே வரிசையில் முன்னேறினேன்.
எனக்கு முன்னால் இருந்தவர் கற்பூரத்தட்டில் நூறு ரூபாய் போட்டார். அர்ச்சகரோ, "உண்டியலில் போடுங்கள்," என்று தலை நிமிராமல் சொன்னார். அவரும் காரணம் கேட்காமல் உண்டியலில் போட்டார். கண்கொத்திப் பாம்புகள் பார்த்துக்கொண்டு நின்றனவே! நான் காணிக்கையை கற்பூரத் தட்டிலேயே போட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
உண்டியலுடன் பல இடங்களில் இ காணிக்கையும் வந்து விட்டதால் பக்தர்கள் பலரும் கோவிலுக்கு ஆன்லைன் மூலமும் காணிக்கை செலுத்த ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications