ஆதரவற்ற, மாற்றுத்திறன் குழந்தைகள் 1008 பேர் தனி ரயிலில்! சென்னை டூ திருப்பதிக்கு இலவச பயணம்
சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு ஆலோசனைக் குழு, சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 1008 பேர் ஆன்மீக பயணமாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு தனி ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேற்கண்ட இரு அமைப்புகளும் ஆண்டுதோறும் ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கேளிக்கை அரங்குகளுக்கும் சுற்றுலாவுக்கும் அழைத்து செல்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 1008 சிறப்பு குழந்தைகளை ஆன்மீக பயணமாக தனி ரயிலில் அழைத்துச் சென்றனர்.
அதே போல் இந்த ஆண்டிலும் 1008 ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி சிறுவர்களை நேற்று திருப்பதிக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அந்த 1008 பேரும் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ரேணிகுண்டா வரை செல்லும் ரயிலில் புறப்பட்டு சென்றனர்.
இந்த ஆன்மீக பயணத்தை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தமிழக ஆலோசனை குழு முன்னாள் தலைவர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதுகுறித்து சேகர் ரெட்டி கூறியதாவது: 1008 சிறுவர்களும் திருப்பதியில் இலவசமாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.
சிறுவர்களுடன் மருத்துவக் குழுவினர், தன்னார்வலர்களும் உடன் செல்கிறார்கள். மொத்தம் 1500 பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். அடுத்து ஆண்டு முதியோரையும் திருப்பதிக்கு இலவசமாக ஆன்மீக பயணம் அழைத்து செல்ல திட்டமிட்டு வருகிறோம் என சேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications