பழனி மலை..தமிழ் கடவுள் முருகன் கோவில் கும்பாபிஷேகம்..ஹெலிகாப்டரில் பூ மழை..என்னென்ன ஏற்பாடுகள்
பழனி மலை கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பழனி: தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் பழனி மலை மீது உள்ள கோபுரங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது மலர் தூவப்பட்டது. நகரில் 3 இடங்களில் நாள் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலை அலையாக மக்கள் திரண்டுள்ளதால் அரோகரா முழக்கம் விண்ணை எட்டுகிறது.

16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி மலைக் கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுவதை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான பழனி முருகன் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை காண அலை அலையாக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
பழனி மலைக் கோயிலில் 2000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால் மலை அடிவாரத்தில் உள்ள பக்தர்கள் கும்பாபிஷேக விழாவை எல்.இ.டி. திரை மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதை உட்பட 3 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
எட்டு கால யாக பூஜைகள் நடைபெற்ற பின்னர் ராஜ கோபுரத்திற்கு கலசங்கள் கொண்டு செல்லப்பட்டன. பச்சைக்கொடி காட்டிய பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தின் போது பழனி மலைக் கோயில் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தின் புனித நீர் தெளிக்க எட்டு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி நகரம் முழுவதும் குவிந்துள்ளதால் 300 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு 7 இடங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 இடங்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பழனியில் ட்ரோன் காமிராக்கள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதுதாராபுரம் சாலையில் மால்குடி மருத்துவமனை பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பைபாஸ் சாலை மார்க்கமாக தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் போக்குரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து பழனி நகருக்குள் செல்வதற்கு இலவச அரசு டவுன் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனியில் இன்று நகரம் முழுவதும் இறைச்சிக்கடைகள் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications