அரோகரா சரண கோஷத்துடன் பழனி பங்குனி உத்திரம்- முத்துக்குமாரசுவாமி-வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்!
பழனி: பங்கு உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனியில் முத்துக்குமாரசுவாமி-வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா சரண கோஷத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழனி. பழனியில் தைப்பூசம், பங்கு உத்திரம் உள்ளிட்டவைகளை முன்னிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். தற்போது பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்த காவடி எடுத்து பழனி முருகனை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

தீர்த்த காவடிகள்: பங்குனி உத்திர காலத்தில் பழனி முருகன் கோவிலுக்கு கொடுமுடி உள்ளிட்ட புனிதத் தலங்களில் இருந்து காவடிகளில் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருவது வழக்கம். பழனி முருகன் கோவிலில் உள்ள சிலை நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டது. தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகம் என்பதால் முருகக் கடவுளை குளிர்விக்க இத்தகைய தீர்த்த காவடிகளை பக்தர்கள் எடுத்து வருவது வழக்கம்.

கொடியேற்றத்துடன் தொடக்கம்: பழனியில் பங்கு உத்திர திருவிழாவானது கடந்த 18-ந் தேதி திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் கொடியேற்ற நிகழ்வுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தும் வருகின்றனர்.

திருக்கல்யாணம்: பங்குனி உத்திர திருவிழாவின் 6-வது நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் சுவாமிகளுக்கு செய்யப்பட்டன. பின்னர் இரவு 7 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்களின் அரோகரா சரண கோஷம் விண்ணைப் பிளந்தது. இதன் பின்னர் 16 வகை தீபாராதணை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
தேரோட்டம்: பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை நடைபெறும். பக்தர்களின் பாதுகாப்புக்காக 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மலைவாழைப் பழம்: பழனி பங்குனி உத்திர திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், புகழ் பெற்ற பிரசாதமான பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்வது வழக்கம். தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்கள், பழனியிலேயே தங்கி பஞ்சாமிர்த பிரசாதத்தை தயார் செய்வதும் வழக்கம். இதற்காக திண்டுக்கல் சிறுமலை, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையும் மலை வாழைப் பழங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பழனி அடிவாரப் பகுதிகளில் 100 டன்னுக்கும் அதிகமான மலை வாழைப் பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications