பக்தர்கள் அதிர்ச்சி! கருட சேவை நிகழ்வில் பல்லக்கு கவிழ்ந்து பெருமாள் சிலை கீழே சாய்ந்ததால் பரபரப்பு!
சென்னை: திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக நடந்த கருட சேவை நிகழ்ச்சியின்போது, பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள அருள்மிகு கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. சின்னகாஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் இந்த கோவில், கெல்லட்பெட் என்ற ஆங்கிலேயரால் தனது உதவியாளருக்காக கட்டப்பட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து உற்சவர் பவழவண்ண பெருமாள் சிலையை காலடிப்பேட்டையில் உள்ள இந்த கோவிலுக்கு எடுத்து வந்ததால் இது சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் உற்சவ வழக்கத்தையே இந்த கோவிலிலும் பின்பற்றி வருகின்றனர். காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவமானது வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, தற்போது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதேபோல, திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் விழா நடைபெற்று வருகிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பட்டாச்சாரியார்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் பல ஆண்டுகளாக அங்கு வைகாசி பிரம்மோற்சவமும் கருட சேவை உற்சவமும் நடைபெறாமல் இருந்து வந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்ற கருட சேவை உற்சவத்தில் பல்லக்கின் தண்டு உடைந்து பெருமாள் சிலை கீழே விழுந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications