மார்கழி அஷ்டமி.. படி அளக்கும் சிவபெருமான்.. ராமேஸ்வரம் கோவிலில் நாளை தீர்த்த கிணறுகளில் நீராட தடை
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி நாளை நடை திறப்பில் மாற்றம் செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதாக ஐதீகம். இன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும்.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மார்கழி மாத அஷ்டமியன்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமியும் அம்மனும் நேரடியாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இன்றைய நாளில் அன்னதானம் செய்தால் புண்ணியம் பெருகும். பொருளாதார நிலையும் உயரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏராளமானோர் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளிய இறைவனை வழிபடுகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு நாளை வியாழக்கிழமையன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பின்னர் 3.30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கிறது.
காலை 4.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடக்கிறது. பின்னர் தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 7 மணிக்கு ராமநாத சுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பக்தர்களுக்கு படி அளப்பதற்காக எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
கோவிலில் இருந்து எழுந்தருளும் சுவாமி-அம்பாள் வர்த்தகன் தெரு, நடுத்தெரு, ராமதீர்த்தம், லட்சுமணத்தீர்த்தம் உள்ளிட்ட நகரின் பல்வேறு முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து படியளக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மீண்டும் பகல் 12 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலுக்கு வந்தடைகின்றனர்.
சுவாமி-அம்பாள் அஷ்டமி பிரதட்சணத்தை முன்னிட்டு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு நாளை காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் நீராடவோ, தரிசனம் செய்யவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications