ரத சப்தமி.. திருமலையில் மலையப்பசுவாமி வீதி உலா.. திருச்சானூரில் 7 வாகனங்களில் உலா வந்த பத்மாவதி
திருப்பதி: ரத சப்தமி விழா இன்றைய தினம் திருமலை திருப்பதியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் நான்கு மாட வீதிகளில் மலையப்பசுவாமி வீதி உலா வருவதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். திருச்சானூரிலும் ரத சப்தமியை முன்னிட்டு பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வந்தார்.
சூரியபகவான் தை மாதம் தனது வடக்கு நோக்கிய பயணத்தை தொடங்குகிறார். சூரிய ஜெயந்தி விழா ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ரத சப்தமியை முன்னிட்டு திருமலையில் உற்சவர் மலையப்ப சுவாமி காலை 7 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். காலை 9 முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், பகல் 1 முதல் 2 வரை அனுமந்த வாகனத்திலும் உலா வருவார். பகல் 2 முதல் 3 வரை சக்கர ஸ்நானமும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கற்பவிருட்ச வாகனத்திலும் உலா வருவார் மலையப்பசுவாமி.
மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும், கடைசியாக இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார் மலையப்பசுவாமி. ரத சப்தமியை முன்னிட்டு நேற்றைய தினம் முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர்.
பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக விஐபி தரிசனம் தவிர, மற்ற விருப்ப தரிசனங்களான மூத்த குடிமக்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்களுக்கான தரிசனம் ஆகியவை இன்றைய தினம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு நாள் பிரம்மோற்சவ வைபவமான ரதசபதமியை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகள் உள்ளிட்ட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் ஏகாந்தத்தின் போது நடைபெற உள்ளன. ரதசப்தமியை முன்னிட்டு திருமலை கோவில் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது.
திருமலையைப் போல திருச்சானூரிலும் இன்றைய தினம் ரத சப்தமி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை முதலே அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் உலா வரும் பத்மாவதி தயாரைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். கோவிலுக்கு வந்துள்ள பக்தர்களுக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications