சன்னதியில் கட்டும் கட்டி.. இனி பம்பையிலேயே ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டலாம்! அதுவும் கம்மி செலவில்!
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் பம்பையிலேயே பக்தர்கள் 24 மணி நேரமும் குறைந்த செலவில் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யாபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.
பொதுவாக சபரிமலை யாத்திரையை துவங்கும் பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே உறவினர்கள் முன்னிலையில் இருமுடி கட்டி பம்பைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் அவசரமாக சபரிமலை பயணம் மேற்கொள்பவர்கள் இருமுடி கட்டாமல் மலைக்கு செல்கின்றனர். அதே நேரத்தில் இருமுடி கட்டிய பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
எனவே 18-ம் படி வழியாக ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் பம்பையிலே மிகக் குறைந்த செலவில் 24 மணி நேரமும் இருமுடி கட்ட வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இருமுடி கட்டு எடுத்து வர முடியாத பக்தர்கள் பம்பையிலே படி ஏற்றத்திற்கு அருகே விநாயகர் கோவில் சன்னதியில் இருமுடி கட்டிக் கொள்ளலாம்.
இதற்காக 300 ரூபாய் கட்டி ரசீது பெற்றுக் கொண்டால் அங்கு இருக்கும் பூசாரிகள் இருமுடி கட்டி பக்தர்களின் தலையில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். மேலும் இங்கு கட்டப்படும் இருமுடியில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்காது. ஒரு நெய் தேங்காய் மட்டும் தரப்படும். கூடுதல் நெய் தேங்காய்க்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் பம்பையில் ஸ்பாட் புக்கிங் செய்து இருமுடி கட்டிக் கொள்ளலாம் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications