ஈரோட்டில் ஆச்சரியம்.. வன்னி மரத்தின் அற்புதம்.. மகிழ்ச்சியை தரும் கொடுமுடி ஸ்ரீ மகுடேஸ்வரர் ஆலயம்
சென்னை: தமிழ்நாட்டிலேயே மும்மூர்த்திகளைக் கொண்ட ஒரே கோவில் என்ற பெருமையை பெற்ற மகுடேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு என்ன தெரியுமா? 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்த வன்னி மரத்தின் அற்புதம் தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஈரோட்டில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் கொடுமுடி என்ற ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ மகுடேஸ்வரர் ஆலயம். இங்கு மும்மூர்த்திகளுக்கும் தனித்தனியாக 3 கோபுரங்களும், தனித்தனியாக 3 சன்னதிகளும் இங்கு உள்ளன. எனவே இங்கு வந்து வழிபட்டால் ஆசீர்வாதமும் 3 மடங்காகும் என்பார்கள்.

ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும், தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்ததாம்.. இதற்காக அவர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க மேரு மலையை கையாண்டனர். ஆதிசேஷன் மேரு மலையை சுற்றி வளைத்துக் கொள்ள, வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை விடுவிக்க முயற்சித்தார். இந்த போட்டியில் மேரு மலை துண்டு துண்டாக சிதறி நாலா பக்கமும் சிதறியது. அவை ஒவ்வொன்றும் சிவலிங்கமாக மாறியது. அப்படி உருவானதுதான் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் என்கிறார்கள்.
மகுடேஸ்வரர்: கொடுமுடியில், சிவன் மகுடேஸ்வரராகவும், அம்பிகை வடிவுடைய நாயகியாகவும் காட்சி தருகிறார்கள்.. மகுடேஸ்வரரான சிவபெருமானின் திருக்கல்யாணத்தை காண்பதற்காக, பிரம்மனும், மகாவிஷ்ணுவும் இந்த தலத்துக்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த கோயிலில் வேப்ப மரமும், அரச மரமும் இணைந்திருக்கும் இடத்தில் முழுமுதற் கடவுள் விநாயகர் இருக்கிறார். இந்த விநாயகரை காவிரி ஆற்றில் ஓடும் தண்ணீரை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத்தடை விலகும், குழந்தை பேறு இல்லாதவர்களுக்கும் விரைவில் பலன் கிடைக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, ராகு கேது தோஷம், களத்திர தோஷம், ஸ்திரீ தோஷம், கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்று பல தோஷங்களும், தடைகளும் இங்கு நிச்சயம் நீங்கும்.
வன்னிமரம்: இந்த கோயிலில் மற்றொரு சிறப்பு, இங்குள்ள வன்னிமரம்தான்.. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது இந்த வன்னிமரம்.. இதில் பூ பூக்கும் என்றாலும் காய் காய்க்காது... அதேபோல ஒருபக்கத்தில் மட்டும் முட்கள் காணப்படும். 3 முகம் கொண்ட பிரம்மதேவன் இந்த வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கிறார்..
முள் நிறைந்தது வன்னிமரம், பாலைவனத்தில் கூட பசுமையாக வளரும் தன்மை கொண்டது. இந்த மரம் முழுவதுமே மருத்துவ குணமுடையது. வன்னிமரத்தின் காற்று சஞ்சீவிக்காற்றுக்கு ஒப்பாக சொல்வார்கள்.
சிறப்புகள்: தண்ணீரில் வன்னி மரத்தின் இலைகளை போடுவதால், அந்த நீர் கெட்டுப்போகாது... பழனி பங்குனி உத்திர தீர்த்த யாத்திரையில் வன்னி இலைக்கே முதலிடம். ஏனென்றால், பழனிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் இந்த வன்னிமர இலையை காவிரி நீரில் போட்டு, காவடி சுமந்து பாதயாத்திரை செல்வார்களாம். அதேபோல, இந்த காவிரி ஆற்றிலிருந்து நீர் கொண்டு காவடியை தொடங்கும் பழக்கம் நீண்டநெடுங்காலமாக இருந்து வருகிறது.
ஆதிசேஷனால் உருவான ஆலயம் என்பதால், இங்கு நாகர் வழிபாடு மிகவும் விசேஷமானது.. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது இப்போதும் நடந்து வருகிறது. இந்த ஆலயத்தில் ராகு-கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபாடு செய்தால், தோஷங்கள் நீங்கும். நாக தோஷம் இருப்பவர்கள், வன்னி மரத்தடியில் கல்லால் செய்யப்பட்ட நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications