மாங்கனி திருவிழா மகத்துவம்.. நாளை காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம்.. இப்படியொரு வரலாறு இருக்கா?
சென்னை: புதுச்சேரி காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி விழாவைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு மாம்பழங்களை பொழியும் மங்களகரமான நிகழ்வு நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது. மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விழாவின் சிறப்பு என்ன தெரியுமா?
காரைக்காலில் சிறந்த வணிகர் குலத்தை சேர்ந்தவரான தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. சிறு வயது முதலே சிவனுக்கு தொண்டு புரிந்து வந்தார்.. புனிதவதி வளர்ந்து ஆளானதும், நாகப்பட்டினம் வணிகரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

ஒரு நாள் பரமதத்தன், தனக்கு கிடைத்த 2 மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் புனிதவதிக்கு கொடுத்து அனுப்பினான். கணவன் வந்ததுமே சேர்ந்து சாப்பிட தயாரானார்.. அப்போது சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான், பசியுடன் உள்ளதாக புனிதவதி வீட்டு வாசலில் நின்று சொன்னார்.
சமையல் செய்ய சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று புனிதவதி சொன்னதற்கு, ''அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, இருப்பதை கொடுங்கள் என்றார் சிவனடியார்.
அதிர்ச்சியடைந்த கணவர்
உடனே, புனிதவதி தனது கணவன் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு சாப்பிட தந்தார்.. அதை சாப்பிட்டுவிட்டு, சிவனடியார் கிளம்பிவிட்டார். கணவன் மதிய உணவு உண்டதுமே, இரண்டாவது மாங்கனி எடுத்து தந்தாள் புனிதவதி..அதை சாப்பிட்டு ருசித்த பரமதத்தன், 2வது மாங்கனியையும் எடுத்து வருமாறு சொன்னார்..
சிவனடியாருக்கு மாங்கனி தந்தது கடவுளை மறுக்கும் கணவனுக்கு தெரிந்தால், வீண் பிரச்சனை வருமே என்று பயந்து, பூஜையறையில் சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். உடனே சிவனும் புனிதவதிக்கு மாங்கனியை தந்தார்..
அதனை சாப்பிட்ட கணவன், முதல் பழம் சாப்பிட்டதுபோல இல்லையே? ஏன் இந்த வேறுபாடு என்று கேட்டான்.. உடனே புனிதவதி நடந்ததை மறைக்காமல் கணவனிடம் சொன்னாள்.. இதை நம்பாத பரமதத்தன், அப்படியானால் உன் சிவனிடமே இன்னொரு மாங்கனி பெற்றுக் கொண்டு வா என்றான்..
சிவபெருமான் தந்த அருள்
இதனால் புனிதவதியும், சிவபெருமானிடம் கண்ணீர் விட்டு அழுது வேண்டவும், இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனை நேரில் பார்த்து ஆச்சரியமடைந்த பரமதத்தன், தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். அத்துடன் தெய்வப்பிறவியிடம் மனிதப்பிறவியால் குடும்பத்தில் வாழ முடியாது என்று கூறி, மனைவியை விட்டு விலகி சென்றுவிட்டான்.
பிறகு பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்து, அங்கேயே ஒரு பெண்ணை மணந்து கொண்டான்.. அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தன்னுடைய முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான்.
கயிலாலயத்துக்கு காலால் நடந்து
ஆனால், கணவனே தன்னை தெய்வம் என்று சொல்லி வணங்கியதால் இறைவனை வேண்டி பேய் உருவமாக மாறி காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பிறகு, அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார் புனிதவதி. காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார்.
அப்போது சிவபெருமான், அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். திருவாலங்காடு: அதற்கு அம்மையார், "உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்'' என்று கேட்டார்.
அம்மையாருக்கு திருக்கோயில்
உடனே சிவபெருமானும், ''அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்'' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகமாகும்.
சிவபெருமானை போற்றி வணங்கிய 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட புகழ் பெற்றவருமான புனிதவதியார் எனும் ஸ்ரீகாரைக்காலம்மையாரின் திருக்கோவில் அமைந்துள்ளது.
சிகர நிகழ்ச்சி மாங்கனி திருவிழா
மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி மாங்கனி திருவிழா 5 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாங்கனி திருவிழா நடைபெற்று வருகிறது. 2 நாளான இன்று காலை பரமதத்தருக்கும், காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
நாளை உள்ளூர் விடுமுறை
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைக்கும் நிகழ்ச்சி நாளை 10ம் தி நடைபெறுகிறது.. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். காலை 9 மணிக்கு சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் வீதி உலா வரும்போது பொதுமக்கள் தங்களின் வீடுகளின் மாடியில் அல்லது பால்கனியில் அருந்து மாங்கனிகளை பிச்சாடனரை நோக்கி வீசுவார்கள். கீழே நிற்கும் பக்தர்கள் அந்த மங்கனிகளை பிடித்து பிரசாதமாக சாப்பிடுவார்கள்..
மாங்கனி திருவிழாவை முன்னிட்டு காரைக்காலில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications