Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழா.. வெள்ளி கருட சேவை பார்த்தால் என்ன விஷேசம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பதிருவிழாவை முன்னிட்டு நாளை கருட சேவையும், மார்ச் 2ம் தேதி தெப்பம் மிதவை உற்சவமும் நடக்கிறது.

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு 4ஆம் திருவிழாவான 26ஆம் தேதியன்று நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் உலா வருகிறார். ஸ்ரீரங்கத்தில் மாசி மாதம் மட்டும் நடைபெறும் வெள்ளி கருடசேவை சிறப்பு வாய்ந்தது. மாசி கருடன் காசியிலும் கிடைக்காது என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் பெருமைக்குரியது. மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம் மாசி மாதம் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

Srirangam Ranganathar Temple Masi Theppathiruvila Garuda sevai on 26th Februray

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் மாசி மாதம் தெப்பத்திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கியுள்ளது. தெப்பத்திருவிழாவின் முதல் நாளான இன்று ஹம்ச வாகனத்திலும், 2ஆம் நாள் ஹனுமந்த வாகனத்திலும் நம் பெருமாள் எழுந்தருளிகிறார்.

3ஆம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4ஆம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5ஆம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

தெப்பத்திருவிழாவின் 7ஆம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ஆம் நாளான வரும் மார்ச் 02ஆம்தேதி மாலை நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் மேலவாசலில் உள்ள தெப்பக்குளம் ஐந்தரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. மாசி தெப்ப உற்சவம் நடைபெறுவதால் தெப்பக்குளத்திற்கு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

Srirangam Ranganathar Temple Masi Theppathiruvila Garuda sevai on 26th Februray

தெப்பத்திருவிழா நடைபெறும் நாளன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். அன்று இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

9ஆம் திருநாளான 23ம் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

Srirangam Ranganathar Temple Masi Theppathiruvila Garuda sevai on 26th Februray

பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

ஸ்ரீரங்கத்தில் மாசி மாதம் மட்டும் நடைபெறும் வெள்ளி கருடசேவை சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீரங்க ஸ்தலமானது சுக்ர ஸ்தலம் என்பதால் இங்கு வெள்ளி உலோகம் மிகவும் விசேஷமானது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது மாசி கருடன். இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் மிக விசேஷமான காட்சி. இந்த வெள்ளி கருட சேவையின் சிறப்பைக் கூறும் மாசி கருடன் காசியிலும் கிடைக்காது என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது.

மஹாவிஷ்ணு தனது வாகனமும் கொடியுமான கருடனில் ஊர்வலம் வந்து சேவை சாதிப்பது சிறப்பாக கருடசேவை எனப்படும் என்பது சாதாரணமான விளக்கம். எம்பெருமானைக் கருட வாகனத்தில் தரிசனம் செய்தவர்களுக்கு வைகுண்ட பேறு உண்டு, மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.

கருட சேவை வழிபாடு மிகுந்த புண்ணியத்தை தருவதாகும்.அதனால் தான் திருப்பதி உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பிரம்மோற்சவ நாட்களில் கருட சேவையை தரிசனம் செய்யவே அதிக பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர்.

கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். பெருமாள் கருடனை வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார். கருட வாகனம் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, கருடன் போன்ற வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார்.

Srirangam Ranganathar Temple Masi Theppathiruvila Garuda sevai on 26th Februray

பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். நாச்சியார் கோவிலில் கல்கருடன் தனி சன்னிதியில் கம்பீரமாக காட்சி தருகிறார். தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருநாங்கூர்,கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய கோயில்களில் கருட சேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திர நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபடுவதால் திருமணம் யோகம் மற்றும் வாகன யோகமும் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் திருமாலை மற்ற எல்லா விதமான வாகனங்களில் தரிசிப்பதைக் காட்டிலும் கருட சேவையில் தரிசிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுவர்.

நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். பெருமாளின் கருடசேவையைக் காண்பதால் வைகுண்ட வாழ்வளிக்கும் என்பது ஒரு ஐதீகம். நாளைய தினம் ஸ்ரீரங்கத்தில் வெள்ளி கருடசேவையைக் காணும் போது மும்மலம் நீக்கி முக்தி தா பெருமாளே! என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+