அய்யா வைகுண்டர் 191வது அவதார தினம்..நாளை வாகன பவனி..4 மாவட்டங்களுக்கு மார்ச் 4ல் உள்ளூர் விடுமுறை
அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு நாளை வாகன பவனி தொடங்குகிறது. மார்ச் 4ஆம் தேதி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: சாமித்தோப்பு அய்யா வைகுண்டரின் 191வது அவதார தின விழாவை முன்னிட்டு வாகன பவனி நாளை புறப்படுகிறது. மார்ச் 4ஆம் தேதி நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் ஐயா வைகுண்டர். சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக ஐயா வைகுண்டரை அவர் வழியை பின்பற்றும் மக்கள் பார்க்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு ஐயா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது. ஐயா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி ஐயா வழி மக்கள் பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு வந்து அருள் பெற்றுச் செல்வர்.
வருடந்தோறும் திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சாமிதோப்பை நோக்கி அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த வருட வாகன பவனி நாளை வெள்ளிக்கிழமை காலை தொடங்குகிறது.
இந்த ஆண்டு நாளை காலை திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து காலை 9 மணிக்கு வாகன பவனி புறப்படுகிறது. இந்த வாகன பவனி திருவனந்தபுரம், பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலை வந்தடைகிறது.
இதே போல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து காலை 6 மணிக்கு மற்றொரு வாகன பவனி நாகர்கோவில் நோக்கி புறப்படுகிறது. இந்த வாகன பவனி திருச்செந்தூர், கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக நாகர்கோவிலை வந்தடைகிறது. இதற்கிடையே நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஆதலவிளை வைகுண்ட மாமலையில் வைகுண்ட தீபம் ஏற்றப்படுகிறது.
திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பவனி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது. இதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடைபயணமாக வரும் பக்தர்கள் அன்று இரவு நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலை வந்தடைகின்றனர். பின்னர் நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் இரவு 7 மணிக்கு அய்யா வழி சமய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். அய்யா வழி அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
அய்யா வைகுண்டசாமி 191வது அவதார தினவிழா ஊர்வலம் 4ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது. ஊர்வலத்துக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். ஜனா.யுகேந்த் முன்னிலை வகிக்கிறார். இந்த ஊர்வலத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை தலைமை பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications