தங்கம் வீட்டில் தங்க..அடகு வைத்த நகையை விரைவில் மீட்க இதை அவசியம் செய்யுங்கள்!
மதுரை: தங்க நகை அணிய அனைவருமே விரும்புகின்றனர். தங்க நகை அணிவதால் சமூக அந்தஸ்து உயரும் சமூகத்திலும் உறவினர்களிடமும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. தங்கம் அணிவது அழகுக்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தங்கம் எல்லோர் வீட்டிலும் எளிதில் தங்கிவிடுவதில்லை. தங்க நகை அதிகம் வீட்டில் சேரவும் அடகு வைத்த நகைகளை எளிதில் திருப்பவும் சில ஆன்மீக பரிகாரம் உள்ளது.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க அனைவரும் விரும்புகின்றனர். அதே போல ஆடிப்பெருக்கு தனத்திரயோதசி நாளிலும் தங்கம் வாங்குகின்றனர். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்பது நம்பிக்கை.
தங்க நகை அணிவதால் உடலில் உள்ள எதிர்மறை சக்தியை வெளியேற்றி நேர்மறை சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
இன்றைக்கு நகைக்கடை விளம்பரங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. நகை அடகு கடை விளம்பரங்களும், நகையை விற்பனை செய்ய எங்க கிட்ட வாங்க என்று அழைக்கும் விளம்பரம் அதிகரிப்பதை வைத்தே தங்கத்திற்கு உள்ள மதிப்பை அறிந்து கொள்ளலாம்.
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் .. தரிசனத்திற்கு 2 நாட்கள் காத்திருப்பு..விஐபி தரிசனம் ரத்து
நகை எந்த நாளில் வாங்கலாம்
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை. பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரம் வரும் நாட்களில் சுக்கிரன், புதன் ஹோரையில் ஒரு கிராம் தங்க நகை வாங்கினாலும் கூட அதிகம் வாங்கும் யோகம் வரும். அதேபோல் புதன், வெள்ளிக்கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்ததுபோல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும். அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் தங்கம் எப்போதும் தங்கும்.
எந்த ராசிக்காரர்கள் எப்போது வாங்கலாம்
மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளி நகை வாங்கலாம். ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளி நகை வாங்கலாம். மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு,திங்கள், புதன் நகை வாங்கலாம். சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளியும், கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் துலாம் ராசிக்காரர்கள் திங்கள் வெள்ளியும், விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமையும், கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும் மீனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்க நல்ல நாட்கள். இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும்.
தங்கம் வீட்டில் தங்கும்
சித்த யோகமும், சுவாதி நட்சத்திரமும் இணையும் நாளில், சொர்ண கணபதி படத்தை இல்லத்து பூஜையறையில் வைத்து வழிபட்டால் தங்கம், வெள்ளி தடையின்றி வந்து சேரும். கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி, வியாழன் ஆகிய இரு நாட்கள் மட்டும் தான் நகை வாங்குவதற்கு நல்ல நாட்களாக கருதப்படுகிறது. மற்ற நாட்களில் அவர்கள் நகை வாங்கினால், அந்த நகை அவர்களிடத்தில் இருக்காதாம்.
குரு பகவான் அருள் தேவை
ஜோதிட ரீதியாக குரு என்ற சொல்லப்படும் வியாழ பகவான்தான் தங்கத்தின் அதிபதியாகத் திகழ்கிறார். பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும். ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜன்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், ஐந்தாம் வீட்டில் உள்ள கிரகம் இரண்டாம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது இரண்டாம் வீட்டில் இருந்தாலோ அவர்கள் வாங்கும் நகைகள் அவர்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தைக் கொண்டு வரும்.
தங்கம் சேரும் ஜாதகம்
ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று சுப வலிமை பெற ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாம் இடம் தன ஸ்தானம், வாக்கு குடும்ப ஸ்தானம். 11ஆம் வீடு லாப ஸ்தானம். இந்த இரண்டு வீட்டின் அதிபதிகளும் பரிவர்த்தனை பெறுவது யோகம். மூன்றாமிடம் கழுத்தை குறிக்கும். இங்கே சுப வலிமை பெற்ற குரு, சுக்கிரன் அமைய கழுத்தில் தங்க ஆபரணம் அணியும் யோகம் அமையும், சந்திரன் புதனும் சுபபலத்திலுடன் மூன்றில் அமைய தங்கம் அதிகம் சேரும் யோகம் உண்டு.
அடகு வைத்த நகையை மீட்க முடியும்
தொழில் முதலீட்டுக்காக நகைகளை வங்கியில் வைப்பதாக இருந்தால், திங்கள், வியாழக்கிழமை நாட்கள் மிகவும் நன்று. மற்றவர்களிடம் பணம் புரட்டுவதாக இருந்தால், ஞாயிற்றுக்கிழமையில் நகை கொடுத்து பணம் பெறலாம். அப்படிச் செய்தால், உடனுக்குடன் சீக்கிரமாக நகையை மீட்டுவிட முடியும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது. கார்த்திகை, மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் யாருக்கும் தங்க நகைகளை இரவல் கொடுக்கவே கூடாது.
நகையை எப்படி மீட்பது
நகையை சிலர் தொழில் வியாபாரம் கல்வி, மருத்துவ செலவிற்காக அடகு வைப்பார்கள். சில இடங்களில் தங்கத்தை கொண்டு போய் அடமானம் வைத்தால், நாம் வைத்த நேரமோ என்னமோ தெரியாது. எவ்வளவு பணம் வந்தாலும் அந்த குறிப்பிட்ட தங்க நகை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வருவோம். அடமான வைத்த நகைக்கு நிறைய வட்டியை வேற கட்டியிருப்போம். புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்படி புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது தங்கத்தை அடமானம் வைத்த ரசீதையும் உங்கள் கையோடு எடுத்துச் செல்லுங்கள். அந்த நகையை எளிதில் மீட்கலாம்.
தங்கத்தின் தோஷம் நீங்க பரிகாரம்
புதிதாக நீங்கள் தங்கம் வாங்கியதும் அதனை ஒரு சுத்தமான வெள்ளை துணியில் வைத்து கட்டி, உப்பில் சிறிது நேரம் புதைத்து வைத்து விடுங்கள். இதனால் தங்கத்தின் மீது உள்ள தோஷங்கள் அத்தனையும் நீங்கும். உங்களிடம் இருக்கும் சிறிய தங்க நகையை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் முதலில் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தங்க தோஷம் இருப்பவர்களுக்கு அந்த தோஷம் விலகும். பிறகு உங்களுடைய நகையை நீங்கள் நகை வைக்கும் பீரோவின் லாக்கர் பகுதியில் ஒரு சிறிய சிகப்பு நிற பட்டுத் துணியை விரித்து அதில் உங்கள் நகையை அதன் மீது வைத்து அதனுடன் சிறு துண்டு பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளுங்கள். துளசி இலைகளை அதனுடன் சேர்த்து வைக்க வேண்டும் இப்படி செய்தால் தங்க நகை நம் வீட்டில் மேலும் பெருகும். பூஜை அறையில் விளக்கேற்றி தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் படிக்க தங்க நகை அதிகம் சேரும் என்பது நம்பிக்கை. எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்யுங்கள் நிச்சயம் நிறைவேறும்.