ஐப்பசி அன்னாபிஷேகம்! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவ.14ல் தரிசன நேரத்தில் மாற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது.
சிவன் கோயில்களில் தினந்தோறும் 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை ஐப்பசி மாத பவுர்ணமி அன்று நடக்கும் அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமானதாகும். இந்த அன்னாபிஷேகத்தை கண் குளிர பார்த்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பார்கள்.

அது போல் கோடி சிவலிங்கங்களை பார்த்த புண்ணியமும் கிடைக்கும். இந்த ஆண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த நாளுடன் ஐப்பசி மாதம் முடிந்து அடுத்தது கார்த்திகை மாதம் தொடங்குகிறது.
நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை 3.53 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 3.42 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. இந்த பவுர்ணமி தினத்தன்று அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்களும் இணைந்து வருகிறது.
இது போன்ற சிறப்பான நாளில் சிவன் கோயில்களில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.லிங்கம் முழுவதும் அன்னம் சாத்தப்பட்டிருக்கும். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம்.
அதன்படி அண்ணாமலையார் கோயிலிலும் அன்னாபிஷேக விழா வரும் நவம்பர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த நாள் பவுர்ணமி என்பதாலும் அன்னாபிஷேகம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம். அந்த வகையில் பக்தர்கள் தரிசனத்திற்காக கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
அதில் ஒன்று தரிசன நேரத்திலும் தரிசன வரிசையிலும் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி அண்ணாமலையார் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் வழக்கம் போல் செயல்படும். 3ஆம் பிரகாரத்தில் தரிசன வரிசையை அனுமதிப்பதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எனவே தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நேரமும் குறையும். அன்னாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. மாலை 6 மணிக்கு மேல் வழக்கம் போல் தரிசனம் செய்யலாம். எனவே குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்திற்கு காத்திருப்பதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications