வீட்டின் பூஜையறையில் செய்யக் கூடாதவை எவை? வெற்றிலையில் மூதேவி வாசம் செய்கிறாளா?
சென்னை: வீட்டின் பூஜையறையில் செய்யக் கூடாதவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இனி அது போன்ற ஒரு தவறை செய்யவே செய்யாதீர்கள். இது போன்ற சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களை நாம் கடைப்பிடித்தால் மட்டுமே நம்மால் ஒளிமயமான வாழ்க்கை வாழ முடியும்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: பூஜையில் வைக்கப்படும் வெற்றிலையை காம்பை கிள்ளிவிட்டுதான் வைக்க வேண்டும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது.

வெறும் வெற்றிலையை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் வைக்கக் கூடாது. வெற்றிலையுடன் பாக்கு மற்றும் பூ கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை, அனைத்து வகை பழங்கள், பூக்கள், மற்றும் தர்ப்பங்களை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீதுதான் வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வீடுகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை பாக்கு வைத்துதான் பூஜை செய்வது வழக்கம். தட்டு நிறைய பழங்களையும் பூக்களையும் வைத்து பூஜை செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் உங்கள் பூஜை நிறைவு பெறாது. உங்கள் நைவேத்தியமும் சுவாமியால் ஏற்கப்படாது.
வெற்றிலை என்பது பார்வதி தேவியாகவும் பாக்கு என்பது சிவனாகவும் கருதப்படுகிறது. எனவே வெற்றிலையையும் பாக்கையும் பிரிக்கக் கூடாது. இந்த வெற்றிலை இருக்கும் வீடுகளில் அமங்கல நிகழ்வுகளை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்கிறார்கள்.
வெற்றிலையில் முப்பெரும் தேவர்களும் முப்பெரும் தேவியர்களும் வாசம் செய்கிறார்கள். எனவே வெற்றிலை பாக்கை வைக்கும் போது தேவர்களுடன் தேவியர்களும் நம் வீட்டில் குடி கொள்வர் என்பது ஐதீகம். அழைப்பிதழ்களை வைக்க சென்றாலும் தட்டு பூரா பழம், தேங்காய், துணி என வைத்திருந்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அது அசிங்கப்படுத்துவது என்பது இன்றும் கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
வெற்றிலையிலும் நுனி பகுதி, காம்பு (அடி) பகுதி என உள்ளது. எனவே நுனி பகுதியை சுவாமிக்கு வைக்கும் போது அவருக்கு இடது புறத்திலும் அடி பகுதியை வலது புறத்திலும் வைக்க வேண்டும். இதே யாருக்காவது தாம்பூலமாக கொடுக்கும் போது எதிரெதிரே நின்றுதான் கொடுப்போம்.
பூஜை அறையில் 4 வெற்றிலையையும் 2 பாக்கையும் வைக்க வேண்டும். தட்டு நிறைய வைப்பதென்றால் கணக்கே இல்லை. திதி உள்ளிட்ட கெட்ட காரியங்களுக்கு ஒரு வெற்றிலை ஒரு பாக்கைத்தான் வைக்க வேண்டும். அது போல் காம்பை கிள்ளிவிட்டு வெற்றிலை வைக்கக் கூடாது. காம்பில் பார்வதியும் நடு பகுதியில் சரஸ்வதியும் நுனி பகுதியில் லட்சுமி தேவியும் வாசம் செய்கிறார்கள். மூப்பெரும் தேவியர்களையும் ஒன்றாகத்தான் நம் வீட்டுக்கு அழைத்து பூஜை அறையில் அமர வைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு காம்பையோ நுனியையோ கிள்ளி போட்டு விட கூடாது. இதை பின்பற்றி வீட்டு பூஜை அறையை மங்களகரமாக வைத்துக் கொள்ளுங்கள்.












Click it and Unblock the Notifications