மதுரை குலுங்க கோவிந்தா! சரண கோஷங்களுடன் பக்தர்கள் வெள்ளத்தில் நீந்திய அழகர் கோவில் ஆடித் தேர்!
மதுரை: மதுரை கள்ளழகர் திருக்கோவில் எனப்படும் அழகர் கோவிலில் ஆடித் தேரோட்டம் கோலாகலமாக இன்று நடைபெற்றது. பல லட்சம் பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா சரண கோஷங்களுடன் வடம்பிடித்து இழுக்க 60 அடி உயர ஆடித் தேரில் அசைந்தாடியபடியே அருள் பாலித்தார் கள்ளழகர் பெருமாள். ஆடித் தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார் கள்ளழகர்.
’தூங்கா நகரமான’ மதுரை திருவிழாக்களின் நகரம்தான். சித்திரை மாதம் நடைபெறுகிற திருவிழாக்களுக்கு இணையானது ஆடி மாதம் அழகர் கோவில் திருத்தேரோட்ட நிகழ்வு. அழகர் கோவில் ஆடித் திருவிழா மொத்தம் 10 நாட்கள் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வுதான் கள்ளழகர் கோவில் ஆடித் தேரோட்டம். கடந்த 13-ந் தேதி அழகர் கோவில் ஆடித் திருவிழா நிகழ்ச்சிகள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோவில்களில் எப்போதும் அறியப்படாத மரபுகள் காலந்தோறும் பின்பற்றப்படுகிற நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும். அழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தைப் பொறுத்தவரையில் வெள்ளையங்குன்றம் ஜமீன்தான் அழகரை தேரில் அழைத்துச் செல்லக் கூடிய முதல் நபர். அழகர் கோவில் கணக்கு பிள்ளையாக இருந்தவர்கள் வெள்ளையங்குன்றம் ஜமீன். ஒவ்வொரு ஆடித் தேரோட்டத்தின் போது வெள்ளையங்குன்றம் ஜமீன்தான் தேங்காய் உடைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பார்.
அதேபோல ஆடித் தேரோட்டத்தின் போது அழகர் கோவிலைச் சுற்றிய 18 கிராமங்களைச் (பட்டிகள்) சேர்ந்த கள்ளர் ஜாதியினருக்கு அழகர் கோவில் நிர்வாகம் பரிவட்டம் கட்டுகிற நடைமுறை இப்போதும் பின்பற்றப்படுகிறது. இந்த 18 கிராமங்களில் 4 கிராம மக்கள்தான் முதலில் வடம்பிடித்து தேர் இழுக்க பின்னர்தான் பக்தர்கள் இணைந்து கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு கிராமத்துக்கு வாய்ப்பு தரப்பட்டு 'வல்லம்’ என்பது வீசப்பட்ட பின் தேரோட்டம் தொடங்கும். இந்த ஆண்டு வல்லாளப்பட்டிக்கு வல்லம் வீசும் வாய்ப்பு தரப்பட்டது.
இதையடுத்து அழகர் கோவிலைச் சுற்றி லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா! கோவிந்தா! சரண கோஷங்களுடன் திருத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவியர் சமேதரராக பக்தர்களுக்கு அருள் பாலித்தபடி வலம் வந்தார் கள்ளழகர் பெருமாள். அழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அதேநேரத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு வந்து அழகர் கோவில் ஆடித் தேரோட்டத்தில் அழகர் பெருமாளை தரிசனம் செய்தனர். இன்று மாலை அழகர் கோவிலில் 18-ம் படி கருப்பண்ணசாமி கோவில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறும்.












Click it and Unblock the Notifications