பிரம்மோற்சவத்திற்கு தயாராகும் திருப்பதி ஏழுமலையான் கோவில்..இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதி
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களுக்கு 300 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் கட்டண சேவைகள் விஐபி தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட உள்ளது.
Recommended Video
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகின்ற செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. இதில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார். அக்டோபர் மாதம் 1ஆம்தேதி கருட சேவை, 2ஆம் தேதி தங்க தேரோட்டம், 4ஆம் தேதி தேரோட்டம், 5ஆம் தேதியன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

பிரம்மோற்சவ ஏற்பாடுகள்
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதிகளில் வாகன சேவைகள் நடைபெறுவதால் அதிக அளவிலான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் குறித்து இன்று திருமலையில் உள்ள அன்னமையா பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

பிரம்மாண்ட ஏற்பாடுகள்
இதில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி. திருப்பதி மாவட்ட ஆட்சியர் வெங்கடா ரமணா ரெட்டி. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரமேஸ்வர ரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, இரண்டு வருடங்களுக்கு பிறகு பிரம்மோற்சவம் நடைபெறுவதால் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கட்டண சேவைகள் ரத்து
திருமலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் அனைவரும் கண்காணிக்கப்படுபவர்கள் மேலும் பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களில் விஐபி தரிசனம், 300 ரூபாய் சிறப்பு தரிசனம், கட்டண சேவைகள், முதியோர்களுக்கு வழங்கப்படும் தரிசனம், சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் தரிசனம், ஆகிய அனைத்தையும் ரத்து செய்யப்படுகிறது.

இலவச தரிசனம் மட்டுமே அனுமதி
இந்த ஒன்பது நாட்களுக்கு இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் புரட்டாசி மாதத்தில் இந்த பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அதிக அளவில் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் எனவே அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கருட சேவை புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications