திருப்பதிக்கு டிசம்பர் மாசம் போறீங்களா? ரூ 300 டிக்கெட் புக் செய்ய ஆதாருடன் காலை 10 மணிக்கு ரெடியா?
திருப்பதி : திருப்பதிக்கு டிசம்பர் மாதம் செல்ல இன்றைய தினம் ஆன்லைனில் ரூ 300 விரைவு தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. இன்று காலை 10 மணிக்கு இந்த டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடும். நவம்பர் மாதம் சிறப்பு தரிசனத்திற்கு 45 ஆயிரம் டிக்கெட்டுகளை வெளியிட்டது.
இந்தியாவில் பணக்கார கடவுளான ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து தரிசனம் செய்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த கோயிலுக்கு வந்து செல்கிறார்கள். இந்த கோயில் செல்வ செழிப்பில் எந்த குறையும் இல்லாத அளவுக்கு இருக்கிறது.

இங்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானமாக கிடைக்கிறது. மேலும் வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பல பக்தர்கள் தங்களின் சொத்துக்களையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைத்து விடுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. அதன்படி ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணி முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டது. அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டனர்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இதே சேவைகளுக்கு நேரடியாக பங்கேற்காமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு டிக்கெட் வெளியிடப்பட்டது. கல்யாணோத்சவத்திற்கு 2 பேருக்கு ரூ 1000 டிக்கெட்டாகும்.
டிசம்பர் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அது போல் வாணி அறக்கட்டளைக்கு ரூ 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட்டது.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான டிக்கெட்டுகள் 23ம் தேதி மாலை 3 மணிக்கும், டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு நுழைவு தரிசன ரூ.300 டிக்கெட்டுகள் செப்டம்பர் 24-ம்தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு டிசம்பர் மாதம் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படும். அதில் புக் செய்து கொள்ளலாம். அரை மணி நேரத்திற்கெல்லாம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விடும். எனவே இணையத்தின் வேகம் அதிகமாக இருக்க வேண்டும். அப்போதுதான் புக் செய்ய முடியும். அது போல் மாலை 3 மணிக்கு திருமலை, திருப்பதியில் தங்கும் அறைகளை புக் செய்வதற்கான முன்பதிவு தொடங்கும்.












Click it and Unblock the Notifications