ஐப்பசி பவுர்ணமியில் வரும் சந்திர கிரகணம்.. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 8 மணி நேரம் தரிசனம் ரத்து
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நாளைய தினம் 28ஆம் தேதி இரவு 7 மணி முதல் 29ஆம் தேதி அதிகாலை 3.15 மணி வரைக்கும் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி திருமலையில் கோவில்கள் நடை மூடப்படும் எனவும் பரிகார பூஜைகளுக்குப் பிறகு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி சென்று வந்தாலே திருப்பம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்து செல்கின்றனர். புரட்டாசி பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே இந்த ஆண்டின் கடைசி சூரிய மற்றும் சந்திர கிரகணம் அடுத்த மாதம் அக்டோபர் மாதம் நிகழ உள்ளது. அக்டோபர் 14 ஆம் தேதி சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 29 ஆம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும்.
ராகு கிரஹஸ்த சந்திர கிரகணம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் நிகழ உள்ளது. மேஷ ராசியில் ராகு சந்திரன், குரு உடன் இணைந்திருக்கும் நேரத்தில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திர கிரகணத்தை இந்தியாவில் தெளிவாக பார்க்க முடியும். இந்தியாவில் கிரகண நேரத்தில் தோஷ காலமாக கடைபிடிக்கப்படுகிறது. கிரகண நேரத்தில் கோவில்கள் மூடப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர ஸ்தலமாகும். சந்திர கிரகணத்தையொட்டி 8 மணி நேரத்திற்கு மேல் மூடப்படுகிறது. அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலையில் நிலவும் பகுதி சந்திர கிரகணத்தால் 28ஆம் தேதி இரவு மூடப்பட்டு அக்டோபர் 29 அன்று மீண்டும் திறக்கப்படும். 29ஆம் ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 2:22 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிறைவடையும். எனவே 28ஆம் தேதி இரவு 7.05 மணிக்கு ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடப்படும்.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம் என்பதால் 29ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவை நடைபெறும். சந்திர கிரகணத்தை ஒட்டி கோயில் சாத்தப்பட்டு பின்னர் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணத்தால் நாளை சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன சேவையை ரத்து செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து நாளை மறுநாள் அதிகாலை சுப்ரபாத சேவை ஏகாந்தமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications