திருப்பதி பிரம்மோற்சவம்..மலை எங்கும் கோவிந்தா முழக்கம்..மலையப்ப சுவாமி மீது காசு வீச வேண்டாமே!
சித்தூர்: திருமலையில் பிரம்மோற்சவ விழா களைகட்டியுள்ளது. சின்ன சேஷ வாகனத்தில் இன்று மலையப்பசுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது. வீதியுலா வரும் மலையப்ப சுவாமியின் மீது நாணயங்களை வீசி எறிவதால் அலங்கரிக்கப்பட்ட தங்க வைர நகைகள் சேதமடைவதாலும், அர்ச்சர்களுக்கும் சிரமம் ஏற்படுவதால் யாரும் காசுகளை வீசி எறியக்கூடாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி வேங்கடாசலபதி கோயிலில் பிரசித்தி பெற்ற பிரம்மோற்சவம் திருவிழா செப்டம்பர் 27ஆம் தேதியான நேற்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவைக் கண்டு தரிசிக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்நாளான நேற்று இரவு 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதி உலா வந்தார்.
திருமலையில் ஈஸியா சுற்றி வரலாம்.. கூகுள் மேப் வசதியுடன் க்யூ ஆர் கோடு ஸ்கேன்.. தேவஸ்தானம் அசத்தல்
சின்ன சேஷ வாகனம்
2வது நாளான இன்று காலையில் 5 தலைகளுடன் கூடிய சின்ன சேஷ வாகனத்தில் மாட வீதியில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சின்னசேஷ வாகன சேவையை முன்னிட்டு கோவிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க சின்ன ஷேச வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு திருவாபரண சமர்ப்பணம், தூபதீப நெய்வேத்திய சமர்ப்பணம் ஆகியவை சாஸ்திர முறையில் நடத்தப்பட்டன.
கோவிந்தா முழக்கம்
தொடர்ந்து வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட உற்சவர் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து கூடியிருந்த பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என்று முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் கோலாட்டம் ஆடியும், சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் வேடங்கள் அணிந்தும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பக்தர்கள் தரிசனம்
யானைகள், குதிரைகள், காளைகள் முன் செல்ல பக்தர்கள் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியபடி அணிவகுக்க, , வேத பண்டிதர்கள் வேதங்களை ஓதியவாறு பின் தொடர கண்கொள்ளா காட்சியாக நடைபெற்ற ஏழுமலையானின் சின்னசேஷ வாகன சேவையை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
பிரமோற்சவத்தின் 2வது நாளான இன்றிரவு, சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமிகள் எழுத்தருளிகிறார்.
தேவஸ்தானம் வேண்டுதல்
இதனிடையே பிரம்மோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, திருமலையில் உள்ள கோகுலத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், திருமலையில் நடைபெறும் ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத் திருவிழாவின் போது, தினந்தோறும் காலை மற்றம் இரவு வேளைகளில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் சுவாமிகளின் வாகன உற்சவ சேவை நடைபெறும். உற்சவரான மலையப்ப சுவாமி தனித்தும், உபயநாச்சியார்களுடன் சேர்ந்தும் எராளமான தங்க வைர நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.
காசு வீசாதீர்கள்
மலையப்ப சுவாமிகள் திருவீதியுலா வரும் சமயத்தில், மாடவீதிகளில் அமர்ந்திருக்கும் பக்தர்கள் உற்சவர் மீது சில்லறை நாணயங்களை வீசி எறிய வேண்டாம். பக்தி மிகுதியில் சுவாமிகள் மீது நாணயங்களை வீசி எறிவதால், சுவாமிகளுக்கு அலங்கரிக்கப்பட்ட தங்க வைர நகைகள் சேதமடைய வாய்ப்புள்ளது. அதோடு, வாகனங்களின் மீது அமர்ந்திருக்கும் அர்ச்சகர்கள் மீதும், வாகனங்களை சுமந்து வரும் ஊழியர்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படும்.
முக கவசம் கட்டாயம்
ஆகவே, மேற்கண்ட சிரமங்களைத் தவிர்க்க வேண்டி, வீதியுலா வரும் மலையப்ப சுவாமிகள் மீது பக்தர்கள் நாணயங்களை வீசி எறிவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், பிரம்மோற்சவத் திருவிழாவைக் காண வரும் அனைத்து பக்தர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தரிசனத்தைக் காண வரும் பக்தர்களிடம் தன்னார்வலர்கள் மிகவும் நட்புடன் பழகி சேவை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் மனம் புண்படும்படியாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றும் ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.