திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்! ஆரூரா தியாகேசா என விண்ணை பிளந்த பக்தர்கள் முழக்கம்
திருவாரூர்: உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் இன்று நடந்தது. தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஆரூரா, தியாகேசா என பக்தர்கள் முழக்கமிட்டனர்.
திருவாரூர் தியாகராஜ சுவாமி பங்குனி உத்திர தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று அதிகாலை விநாயகர் தேரும், சுப்பிரமணியர் தேரும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

இதையடுத்து காலை ஆழித்தோரேட்டம் தொடங்கியது. இந்த தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இவர்களுக்காக 2000 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். 96 அடி உயரம், 350 டன் எடை கொண்ட ஆழித்தேரை ஆரூரா தியாகேசா என பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
இந்த ஆழித்தேரோட்டத்தால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது. இதனால் இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. இந்த கோயிலின் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும். இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் கொண்ட பாதுகாப்பான தேர் இதுவாகும்.
இந்த வசதிகளை திருச்சி பெல் நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. இந்த தேரின் முன்புறம் வடங்களை பக்தர்கள் இழுப்பார்கள். பின்புறமுள்ள இரு சக்கரங்களையும் இரு புல்டோசர்கள் தள்ளும்.
கடந்த 2010 ஆம் ஆண்டு தேர் பழுதடைந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை. சென்னை வள்ளுவர் கோட்டம் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications